‘லியோ’ படப்பிடிப்பு தளத்தில் விஜய் கூறிய வார்த்தைகள் தன்னை ஆச்சரியப்படுத்தியதாக மலையாள நடிகர் பாபு ஆண்டனி தெரிவித்துள்ளார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், த்ரிஷா நடித்து வரும் படம், ‘லியோ’. கவுதம் வாசுதேவ் மேனன், அர்ஜுன், மிஷ்கின், பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், சஞ்சய் தத் உட்பட பலர் இதில் நடிக்கின்றனர். மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார். அனிருத் இசை அமைக்கிறார். செவன் ஸ்கிரீன் நிறுவனம் படத்தைத் தயாரிக்கிறது.
கடந்த ஒரு மாதமாக காஷ்மீரில் ‘லியோ’ படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வந்தது. தீவிரமாக நடைபெற்று வந்த இந்தப் படப்பிடிப்பில் அண்மையில் சஞ்சய் தத் நடிக்கும் காட்சிகள் நிறைவடைந்தன. இதனையடுத்து தற்போது படத்தின் காஷ்மீர் ஷெட்யூல் முடிந்துள்ளது. பிரபல மலையாள நடிகர் பாபு ஆண்டனி இப்படத்தில் நடிக்கிறார்.
தமிழில் சத்யராஜின் ‘பூவிழி வாசலிலே’, ‘பேர் சொல்லும் பிள்ளை’ உள்ளிட்டப் படங்களில் வில்லனாக நடித்த பாபு ஆண்டனி, தற்போது குணசித்திர நடிகராகவும் பரிணமித்து வருகிறார். இந்நிலையில், அவர் தனது சமூகவலைத்தள பக்கத்தில் விஜய் குறித்தும் ‘லியோ’ குறித்தும் பகிர்ந்துள்ளார். அதில், “விஜய் மிகவும் பணிவாகவும், அன்பாகவும் நடந்து கொண்டார். நான் நடித்த பூவிழி வாசலிலே, சூரியன், விண்ணைத் தாண்டி வருவாயா போன்ற திரைப்படங்களை அவர் மிகவும் ரசித்ததாகவும், அவர் எனது ரசிகர் என்றும் கூறினார். எனக்கு இது மிகவும் இன்ப அதிர்ச்சியாக இருந்தது. அவரைப் போன்ற ஒருவரிடமிருந்து இதுபோன்ற வார்த்தைகளை கேட்டதால் நான் மிகவும் ஆச்சரியப்பட்டேன். மேலும், லோகேஷ் கனகராஜ் மற்றும் படக்குழுவினர் அனைவருமே அன்புடன் நடந்துகொண்டார்கள். இவ்வாறு கிடைப்பது ஒரு வரம். இத்தனைக்கும் விஜய் மற்றும் அனைவரையும் இப்போதுதான் முதல்முறையாக சந்தித்தேன்” என பதிவிட்டுள்ளார்.