‘காந்தாரா 2’ படத்தின் எழுத்துப் பணிகளை தொடங்கியுள்ளதாக படத்தின் இயக்குநரும், நடிகருமான ரிஷப் ஷெட்டி தெரிவித்துள்ளார்.
ரிஷப் ஷெட்டி நடித்து இயக்கிய ‘காந்தாரா’ திரைப்படம் கடந்தாண்டு கன்னடத்தில் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்றது. இந்தப் படத்தின் வரவேற்பு காரணமாக பான் இந்தியா முறையில் மற்ற மொழிகளிலும் படம் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. இதன் பயனாக ரூ.16 கோடியில் உருவான இப்படம் ரூ.400 கோடிக்கும் மேல் வசூலித்து இமாலய சாதனை படைத்தது.
‘காந்தாரா’ பட வெற்றி விழாவில் கலந்துகொண்டு பேசிய படத்தின் இயக்குநரும், நடிகருமான ரிஷப் ஷெட்டி, “தற்போது வெளியாகியிருப்பது ‘காந்தாரா’ படத்தின் இரண்டாம் பாகம்தான். கதைப்படிப் பார்த்தால் முதல் பாகம் அடுத்த ஆண்டு வெளியாகும். படத்தில் இடம்பெற்ற தெய்வத்தின் பின்னணி பற்றி சொல்லப்படும் கதைதான் அடுத்த பாகத்தில் இருக்கும்” என தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், உகாதி திருநாளையொட்டி ரிஷப் ஷெட்டி தனது ட்விட்டர் பக்கத்தில், “காந்தாரா படத்தின் எழுத்துப் பணிகள் தொடங்கியுள்ளன” என்று பதிவிட்டுள்ளார். படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஹோம்பலே நிறுவனம் ட்விட்டர் பக்கத்தில், “உகாதி மற்றும் புத்தாண்டு தினத்தையொட்டி, ‘காந்தாரா’ படத்தின் இரண்டாம் பாகத்திற்கான எழுத்துப்பணி தொடங்கியுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். இயற்கையுடனான உறவை வெளிப்படுத்தும் மற்றொரு வசீகரிக்கும் கதையை உங்களிடம் கொண்டு சேர்க்க ஆவலுடன் இருக்கிறோம். மேலும் பல அப்டேட்டுக்காக காத்திருங்கள்” என பதிவிடப்பட்டுள்ளது.
» “திரையுலகில் மூவருமே பணியாற்றிக் கொண்டிருப்பதில் மகிழ்ச்சி” - தங்கர் பச்சான்
» காஷ்மீரில் ‘லியோ’ படக்குழுவின் ஹோட்டலில் நடந்தது என்ன? - வீடியோ பகிர்வு