‘தசரா’ படக்குழுவுக்கு 130 தங்க நாணயங்கள் - இன்ப அதிர்ச்சி கொடுத்த கீர்த்தி சுரேஷ்

By செய்திப்பிரிவு

‘தசரா’ படக்குழுவைச் சேர்ந்தவர்களுக்கு 130 தங்க நாணயங்கள் வழங்கி நடிகை கீர்த்தி சுரேஷ் இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில் நானி, கீர்த்தி சுரேஷ் நடிப்பில் இம்மாத இறுதியில் திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம் ‘தசரா’. தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் பான் இந்தியா முறையில் வெளியாகும் இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். சமுத்திரகனி, ஷைன்டாம் சாக்கோ, தீக்ஷித் ஷெட்டி உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்தை ஸ்ரீலக்‌ஷ்மி வெங்கடேஸ்வரா நிறுவனம் தயாரித்துள்ளது. அண்மையில் வெளியான படத்தின் ட்ரெய்லர் ரசிகர்களிடையே கவனம் ஈர்த்தது.

இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பின் இறுதி நாளன்று நடிகை கீர்த்தி சுரேஷ் படக்குழுவைச் சேர்ந்த 130 பேருக்கு தலா 10 கிராம் தங்க நாணயங்களை வழங்கியுள்ளார். ரூ.70 லட்சம் முதல் ரூ.75 லட்சம் வரை செலவு செய்து தங்க நாணயங்களை நாயகி ஒருவர் வழங்கியிருப்பது படக்குழுவினரை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. படப்பிடிப்பின் இறுதி நாளன்று நடிகை கீர்த்தி சுரேஷ் மிகவும் எமோஷனலாக இருந்ததால் தன்னுடன் பணியாற்றிய படக்குழுவுக்கு தங்க நாணயங்களை பரிசளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ட்ரெய்லர் வீடியோ:

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE