“டி.ராஜேந்தர் எனக்கு மிகப்பெரிய இன்ஸ்பிரேஷன்” என ‘பத்து தல’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
ஓபிலி கிருஷ்ணா இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள ‘பத்து தல’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்று வருகிறது. இதில் பேசிய இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், “பத்து தல படத்தில் பணியாற்ற ஒப்புக்கொண்டது சிம்புவுக்காக தான். மற்றொரு காரணம் ஓபிலி கிருஷ்ணா. அவரிடம் ஒரு தனித்துவ இசை ஆர்வம் இருக்கிறது. படத்தில் வரும் ‘அக்கறையில’ பாடல் சிம்பு பாட வேண்டியது. அவர் தாய்லாந்து சென்றதால் அந்த பாடலை நானே பாடிவிட்டேன். டி.ராஜேந்தர் இந்நிகழ்ச்சிக்கு வந்துள்ளார்.
அவர் என்னுடைய இன்ஸ்பிரேஷன். இளையராஜா, எம்.எஸ்.வி, கே.வி.மஹாதேவன் உள்ளிட்ட பலரிடம் நான் வேலை பார்த்திருக்கிறேன். ஆனால், டி.ராஜேந்தரிடம் வேலை பார்க்கும்போது அதுவரை இன்ட்ரோவர்ட்டாக இருந்த நான் அவர் வேலை செய்யும் ஸ்டைலை பார்த்து எக்ஸ்ட்ரோவர்டாக மாறினேன். அதுதான் எனக்கு பெரிய இன்ஸ்பிரேஷன்” என்றார்.
மேலும், “சினிமாவில் வேலைப்பார்க்கும் லைட்மேன்களுக்காக நாங்கள் ‘சேவ் லைட்மேன் ஃபண்ட்’ என ஃபண்ட் ஒன்றை ஆரம்பித்திருக்கின்றோம். காரணம் அவர்களுக்கென்று எந்த நிதி ஆதாரமும் இல்லை. அவர்களுக்காக ஒரு வெப்சைட் தொடங்குகிறோம். அதனை சிம்பு திறந்து வைத்தால் மகிழ்வேன்” என கூறி லைட்மேன் ஃபண்ட் இணையதளம் ஆரம்பிக்கப்பட்டது.