‘எவ்ரிதிங் எவ்ரிவேர் ஆல் அட் ஒன்ஸ்’ படத்தின் சிறந்த துணை நடிகருக்கான ஆஸ்கர் விருதை பெற்றுள்ளார் நடிகர் கே ஹுய் குவான். ஆஸ்கர் மேடையில் கண்ணீர்மல்க பேசிய அவரின் உரை பார்வையாளர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற்ற ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் கே ஹுய் குவான் (Ke Huy Quan) பெயர் அறிவிக்கப்பட்டது அவர் தன்னுடைய சக நடிகர்களை கட்டியணைத்தபின் மேடைக்குச் சென்றார். உணர்ச்சிவசத்தில் பொங்கியவர் கண்ணீர்மல்க ஆஸ்கர் விருதை முத்தமிட்டு பேசத்தடுமாறினார். இதையடுத்து பேச முயன்ற கே ஹூய் குவான், “84 வயதான எனது அம்மா தற்போது வீட்டில் இந்த நிகழ்ச்சியைப் பார்த்துகொண்டிருப்பார். அம்மா நான் ஆஸ்கர் விருதை வென்றுவிட்டேன்” என கண்ணீர் பெருக்கெடுக்க கூறினார்.
தொடர்ந்து, “எனது பயணம் படகில் தொடங்கியது. அகதிகள் முகாமில் ஒரு வருடம் கழித்தேன். இறுதியாக எப்படியோ, ஹாலிவுட்டின் மிகப்பெரிய மேடையில் நான் இங்கு வந்து சேர்ந்திருக்கிறேன். இது போன்ற கதைகள் சினிமாவில் தான் நடக்கும் என்பார்கள். இது எனக்கு நடந்திருப்பதை என்னால் நம்ப முடியவில்லை. இது அமெரிக்க கனவு. என் வாழ்க்கையில் எனக்கு கிடைத்திருக்கும் அனைத்து வகையான அன்புக்கும் நான் கடமைபட்டிருக்கிறேன். என்னுடைய மனைவி எகோ மாதந்தோறும், வருடந்தோறும் 20 வருடங்களாக எனக்கான நாள் நிச்சயம் வரும் என கூறிக்கொண்டேயிருப்பார். கனவுகள் மீது நிச்சயம் நம்பிக்கை வையுங்கள். நான் கிட்டத்தட்ட எனது கனவை விட்டுவிட்டேன். தயவுசெய்து உங்கள் கனவுகளை உயிரோட்டமாக வைத்திருங்கள். அனைவருக்கும் நன்றி” என்றார்.
» 7 ஆஸ்கர் விருதுகளை வென்ற ‘எவ்ரிதிங் எவ்ரிவேர் ஆல் அட் ஒன்ஸ்’
» ஆஸ்கர் விருது வென்ற இந்திய படைப்பாளிகள் | பிரதமர் மோடி உள்ளிட்டோர் வாழ்த்து