“ரஜினியுடன் ‘சிவாஜி’ படத்தில் நடிக்கும்போது நிறைய விஷயங்களைக் கற்றுக் கொண்டேன். அவர்தான் என்றைக்கும் சூப்பர் ஸ்டார்” என நடிகை ஸ்ரேயா தெரிவித்துள்ளார்.
கன்னட நடிகர் உபேந்திரா, ஸ்ரேயா நடிப்பில் பான் இந்தியா முறையில் வரும் மார்ச் 17-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது ‘கப்சா’ திரைப்படம். இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய நடிகை ஸ்ரேயா, “கப்சா என் மனதுக்கு நெருக்கமான திரைப்படம். எனக்கு இந்தப் படத்தில் நடிக்க வாய்ப்பளித்த இயக்குநருக்கு நன்றி. உபேந்திரா மிகவும் தன்னடக்கமான நடிகர். ரஜினி தான் என்றும் சூப்பர்ஸ்டார். ரஜினியுடன் நடித்ததில் நிறைய கற்றுக் கொண்டேன்.
அவருடன் மீண்டும் நடிக்க ஆசைப்படுகிறேன். எப்படி மற்றவர்களுக்கு மரியாதை கொடுக்க வேண்டும், மற்றவர்களிடம் இரக்கம் காட்டுவது என பல விஷயங்களை நான் அவரிடமிருந்து கற்றுக்கொண்டேன். வெற்றியை தலைக்கு மேல் உயர்த்திக்கொள்ள கூடாது என்பதை அவரைப்பார்த்து கற்றுக்கொண்டேன். ‘சிவாஜி’ படத்தில் நடிக்க வாய்ப்பளித்த ஷங்கரை தற்போது நினைவுகூர்ந்து நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ‘கப்சா’ படத்தை அனைவரும் திரையரங்குக்குச் சென்று பாருங்கள். உங்களுக்கு பிடிக்கும்” என்றார்.