‘வழிநெடுக காட்டு மல்லி’ பாடல் வைரல் - பாடகர் அனன்யா பட்டின் வியத்தகு ஹிட் லிஸ்ட்!

By கலிலுல்லா

வெற்றிமாறன் இயக்கத்தில் இளையராஜா இசையமைத்துள்ள ‘விடுதலை பாகம் 1’ படத்தின் பாடல்கள் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று வருகின்றன. அதிலும் குறிப்பாக ‘உன்னோட நடந்தா’ பாடலும், ‘வழிநெடுக காட்டுமல்லி’ பாடலும் ரசிகர்களின் விருப்பத்தேர்வாக உள்ளது. இந்த இரண்டு பாடல்களைப்பாடிய அனன்யா பட் குறித்து பார்ப்போம்.

கர்நாடகாவை பிறப்பிடமாக கொண்ட அனன்யா பட் கன்னட பாடல்கள் வழியே ரசிகர்களுக்கு அறிமுகமானார். 2013-ம் ஆண்டு கன்னடத்தில் வெளியான ‘லூசியா’ படத்தில் ‘நீ தோரேடா கழிகேயலி’ என்ற தனது முதல் பாடலை பாடியிருந்தார். அதைத் தொடர்ந்து கன்னடம், தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் பாடியுள்ளார். குறிப்பாக பான் இந்தியா படங்களான ‘கேஜிஎஃப் 1’, ‘கேஜிஎஃப் 2’, ‘புஷ்பா தி ரைஸ்’, ‘காந்தாரா’ உள்ளிட்ட படங்களில் அனன்யாவின் குரல் ஒலிப்பதை கேட்க முடியும். இந்நிலையில் அவர் பாடிய தமிழ் பாடல்களை பார்ப்போம்.

தீரா தீரா: ‘கேஜிஎஃப் 1’ படத்தில் ‘தீரா தீரா’ என ஆக்ரோஷமாக ஒலிக்கும் பாடலில், ‘மனதில் விதைத்த வார்த்தை நினைவிருக்கும். தடைகள் எதையும் மகனே வென்று வா..’ என வருடும் மென்மையான குரல் அனன்யாவுடையது. காட்சிகளுக்கு உயிரூட்டிய இப்பாடல் மாபெரும் ஹிட்டடித்தது.

அகிலம் நீ: ‘கேஜிஎஃப் 2’ படத்தின் எமோஷனல் ஆத்மாவான மகனுக்காக தாய் பாடும் ‘அகிலம் நீ’ பாடல் அனன்யாவின் குரலுக்கு சொந்தமானது. ‘ஒருவனாய் வெல்லடா, உனக்கு நீ ஆயுதம் உலகிலே’ என வரிகள் அடங்கிய மொத்த பாடலும் திகட்டாத இசையனுபவம்.

கருவினில் என்னை சுமந்து: மொத்த ‘கேஜிஎஃப்’ பாடல்களையும் குத்தைக்கு எடுத்தது போல எமோஷனல் பாடல்களை அட்டகாசமாக அந்த உணர்ச்சிகள் நீர்த்து போகாமல் பாடியிருப்பார் அனன்யா பட். அந்த வகையில் ‘கருவினில் என்னை சுமந்து’ பாடலில் ஒலிக்கும் அவரின் குரலின் ஈரம் கண்களில் கண்ணீர் வரவழைக்கும் ஆற்றலுடையது. ‘உயிருள்ள கடவுளை உன் உருவில் பார்க்கின்றேன். நீதான் நம்பிக்கை என்றுமே’ என அவர் பாடி முடிக்கும்போது உடல் சிலிர்த்து போகும்.

மெஹபூபா: ரத்தக்களறியான ‘கேஜிஎஃப் 2’ களத்தில் ‘வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே.. வந்தாய் கண்முன்னே. இது நிஜமா சொல் அன்பே’ என ஒலிக்கும் குரல் அனன்யா பட் உடையது. ‘மெஹபூபா’ ‘கேஜிஎஃப் 2’ படத்தின் ஹிட் பாடல்களில் ஒன்று.

எங்கே நீதி: ‘நெஞ்சுக்கு நீதி’ படத்தில் ‘எங்கே நீதி’ பாடல் மொத்த படத்துக்குமான கனத்தை பலமடங்கு கூட்டியிருக்கும். அந்தப் பாடலின் தொடக்கத்தில் வரும் வரிக்குள் வலியை அடைத்து அட்டகாசமாக பாடியிருப்பார் அனன்யா பட். அழுத்தமான அந்த பாடலை அவர் பாடியிருக்கும் விதமும் ‘தீ கூட தீட்டாச்சே’ போன்ற வரிகளும் மனம் முழுக்க அடர்த்தியை பரவச்செய்யும்.

கேஜிஎஃப்பின் மெஹபூபா பாடலை அனைத்து மொழிகளிலும் பாடி அசத்தும் அனன்யா பட்டின் கவர் வீடியோ ஸ்பெஷல் மென்சன்:

உனக்காக உலகம்: ஏ.எல்.விஜய் இயக்கத்தில் வெளியான ‘தலைவி’ படத்தில் ஜி.வி.பிரகாஷ்குமார் இசையில் ‘உனக்காக உலகம்’ பாடலை ஹரிஷங்கருடன் இணைந்து பாடியிருப்பார் அனன்யா பட்.

வந்தே மாதரம்: ஜெயம்ரவியின் ‘பூமி’ படத்தில் சபேஷ் மன்மதனுடன் இணைந்து ‘வந்தே மாதரம்’ பாடலை அந்தப் பாடலுக்கான ஹை பிச்சுடன் பாடியிருப்பார் அனன்யா.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE