“கற்பனைக்கு எட்டாத அற்புதம் இது” - கமல் தயாரிப்பில் இயக்குவது குறித்து நெகிழ்ந்த தேசிங்கு பெரியசாமி

By செய்திப்பிரிவு

“கற்பனைக்கு எட்டாத அற்புதங்களுக்கு நான் நன்றியுள்ளவனாக உணர்கிறேன்” என கமல்ஹாசன் தயாரிப்பில் படம் இயக்க உள்ளது குறித்து இயக்குநர் தேசிங்கு பெரியசாமி நெகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் வெளியான ‘வெந்து தணிந்தது காடு’ திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இந்தப் படத்தைத் தொடர்ந்து நடிகர் சிம்பு, ஓபிலி கிருஷ்ணாவுடன் இணைந்து ‘பத்து தல’ படத்தில் நடித்துள்ளார். இந்தப் படம் வரும் மார்ச் 31-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

இந்தப் படத்தைத் தொடர்ந்து நடிகர் சிம்பு நடிக்கும் படத்தை இயக்குகிறார் ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படத்தின் இயக்குநர் தேசிங்கு பெரியசாமி. இப்படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கிறது. படம் அடுத்த ஆண்டு திரைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தனக்கு கிடைந்த இந்த வாய்ப்பு குறித்து இயக்குநர் தேசிங்கு பெரியசாமி தனது ட்விட்டர் பக்கத்தில், “என் வாழ்க்கையின் நிகழ்ந்துள்ள கற்பனைக்கு எட்டாத அற்புதங்களுக்கு நான் மிகவும் நன்றியுள்ளவனாக உணர்கிறேன். உலக நாயகனுக்கு கதை சொல்லும் பாக்கியம் கிடைத்தது மற்றும் அவரின் தயாரிப்பின் கீழ் பணிபுரியும் வாய்ப்பு கிடைத்துள்ளது. கனவு நனவானது; அற்புதங்கள் நிகழ்கின்றன” என பதிவிட்டுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE