அடுத்தச் சுற்றுக்கு தயாராகும் ‘சார்பட்டா பரம்பரை’ - இரண்டாம் பாகத்தில் இணைந்த ஆர்யா, பா.ரஞ்சித்

By செய்திப்பிரிவு

சென்னை: பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவான சார்பட்டா பரம்பரை படத்தின் இரண்டாம் பாகம் வெகு விரைவில் உருவாக்கப்படும் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் ஆர்யா நடிப்பதும் உறுதியாகி உள்ளது.

கடந்த 2021-ல் வெளியான திரைப்படம் சார்பட்டா பரம்பரை. குத்துச்சண்டையில் ஆர்வம் கொண்ட கபிலனின் வாழ்க்கைதான் கதை. அதன் ஊடாக அந்தப் பகுதி மக்களின் வாழ்வியலை இயக்குநர் பா.ரஞ்சித் காட்சிப்படுத்தி இருப்பார். வட சென்னை பகுதியில் 1970-களில் இருந்த குத்துச்சண்டை பரம்பரைகளும் படத்தில் இடம்பெற்றிருக்கும்.

ஆர்யா, பசுபதி, துஷாரா விஜயன், ஜான் விஜய், கலையரசன், காளி வெங்கட் என மிகப் பெரிய நடிகர்கள் குழு இந்தப் படத்தில் நடித்திருந்தனர். படம் ஓடிடி தளத்தில் வெளியாகி இருந்தது. ரசிகர்கள் மத்தியில் அதீத வரவேற்பை பெற்றது. வசனங்கள், பாத்திரங்கள் என ஒவ்வொன்றும் கவனம் ஈர்த்தது. வேம்புலி, டான்சிங் ரோஸ், பீடி தாத்தா, டேடி, ரங்கன் வாத்தியார் என பல பாத்திரங்கள் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தது.

இந்த நிலையில், இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் வெளியாகும் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த முறை படம் தியேட்டரில் வெளியாக வேண்டும் என ரசிகர்கள் இப்போதே கோரிக்கை வைப்பதை பார்க்க முடிகிறது. இயக்குநர் பா.ரஞ்சித் ‘தங்கலான்’ படத்தை தற்போது இயக்கி வருகிறார். இதன் படப்பிடிப்பு பணிகள் முடிந்ததும் சார்பட்டா பரம்பரை 2 பணிகள் துவங்கும் என தெரிகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE