மலையாள நடிகை சம்யுக்தா, தமிழில் களரி, ஜூலை காற்றில் ஆகிய படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் வெளியான ‘வாத்தி’ படத்தில் தனுஷ் ஜோடியாக நடித்திருந்தார். இவரை மலையாளத் தயாரிப்பாளர் சாண்ட்ரா தாமஸ் புகழ்ந்துள்ளார்.
இதுபற்றி அவர் கூறியிருப்பதாவது: நான் தயாரித்த ‘எடக்காடு பட்டாலியன்’ படத்தில் நடித்ததற் காக சம்யுக்தாவுக்கு 65 சதவிகித சம்பளத்தைதான் கொடுத்தேன். படம் ரிலீஸ் ஆகி வரவேற்பைப் பெறவில்லை. பாக்கி ஊதியத்தைக் கொடுக்க முயன்றபோது அவர் வாங்க மறுத்துவிட்டார்.
அவர் மனதுக்கு முன் நான் தலைவணங்க வேண்டியிருந்தது. முழு ஊதியமும் தரவில்லை என்றால் டப்பிங் பேசவும் படத்தின் புரமோஷனுக்கும் வர மறுக்கும் நடிகர்களுக்கு மத்தியில் சம்யுக்தா ஒரு பாடப்புத்தகம் போன்றவர்.
வருடத்துக்கு 300 படங்களுக்கு மேல் தயாராகும் மலையாள சினிமாவில் 5 சதவிகித படங்கள் மட்டுமே வெற்றி பெறுகின்றன. இந்த நிலையில் சம்யுக்தா போன்றவர்கள் தயாரிப்பாளர்களுக்குத் தேவை என்பதை என் அனுபவத்தில் சொல்கிறேன். இவ்வாறு சாண்ட்ரா தாமஸ் கூறியுள்ளார்.