நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ் நடித்து வரும் படம், ‘புராஜெக்ட் கே’. பான் இந்தியா முறையில் உருவாகும் இந்தப் படத்தில் அமிதாப் பச்சன், தீபிகா படுகோன் உட்பட பலர் நடிக்கின்றனர். சந்தோஷ் நாராயணன் இசை அமைக்கிறார். பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகும் இந்தப் படம் பற்றி அதன் தயாரிப்பாளர் அஸ்வினி தத் அளித்துள்ள பேட்டி, எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
அவர் கூறும்போது, “கிராபிக்ஸுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து உருவாகும் படம் இது. அந்த வேலைகளைத் தொடங்கி 5 மாதங்கள் ஆகிறது. கற்பனை மற்றும் அறிவியல் புனைகதையை அடிப்படையாகக் கொண்டு படம் உருவாகிறது. விஷ்ணுவின் நவீன அவதாரத்தைப் பற்றியதாகவும் இருக்கும். சென்டிமென்டும் இருக்கிறது. ஆக்ஷன் காட்சிகளை மேற்பார்வையிட நான்கைந்து சர்வதேச ஸ்டன்ட் இயக்குநர்களை பயன்படுத்துகிறோம். படத்தில் பார்க்கும் ஒவ்வொன்றும் ரசிகர்களைத் திகைக்க வைக்கும். இதுவரை 70 சதவிகித காட்சிகள் முடிவடைந்துவிட்டன” என்று அஸ்வினி தத் தெரிவித்துள்ளார். இந்தப் படம், அடுத்த ஆண்டு ஜனவரி 12-ல் வெளியாகிறது.