விஜய்யின் ‘லியோ’ படத்தின் தனக்கான காட்சிகள் நிறைவடைந்துவிட்டதாகவும், காஷ்மீரிலிருந்து சென்னை திரும்புவதாகவும் நடிகர் மிஷ்கின் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “காஷ்மீரில் இருந்த சென்னை திரும்புகிறேன். மைனஸ் 12 டிகிரியில் 500 பேர்கொண்ட லியோ படக்குழு கடுமையாக உழைத்து என்னுடைய பகுதியை நிறைவு செய்தது.ஸ்டண்ட் மாஸ்டர் அன்பறிவு மிகச்சிறப்பாக ஒரு சண்டை காட்சியை படமாக்கினார். உதவி இயக்குநர்களின் ஓயாத உழைப்பும், என்மேல் அவர்கள் காட்டிய அக்கறையும் என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. படத்தின் தயாரிப்பாளர் லலித் அந்த குளிரிலும் ஒரு சக தொழிலாளியாக உழைத்துக்கொண்டிருந்தார்.
படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ஒரு தேர்ச்சி பெற்ற இயக்குநராக அன்பாகவும், கண்டிப்பாகவும், ஒத்த சிந்தனையுடனும், ஒரு பெரும் வீரனைப்போல் களத்தில் இயங்கிக்கொண்டிருந்தார். என் கடைசி காட்சி முடிந்தவுடன் என்னை ஆரத் தழுவினார். அவர் நெற்றியில் நான் முத்தமிட்டேன்.
» உதயநிதி ஸ்டாலினின் ‘கண்ணை நம்பாதே’ ட்ரெய்லர் எப்படி?
» ரவி தேஜாவின் ‘ராவணாசுரா’ ஏப்ரல் 7-ல் வெளியாகும் என அறிவிப்பு
என் அருமை தம்பி விஜய்யுடன் ஒரு நடிகனாக இந்தப் படத்தில் பணியாற்றியதை நினைத்து சந்தோஷம் அடைகிறேன். அவர் என்னுடன் பண்பாக நடந்துகொண்ட விதத்தையும், அவரது அன்பையும் நான் என்றும் மறவேன். லியோ திரைப்படம் மிகப்பெரிய வெற்றியடையும்” இவ்வாறு தனது வாழ்த்துச் செய்தியில் மிஷ்கின் தெரிவித்துள்ளார்.
லியோ திரைப்படத்தில் விஜய், த்ரிஷா உடன் கெளதம் மேனன், மன்சூர் அலிகான், அர்ஜூன், சஞ்சய் தத், பிரியா ஆனந்த் உள்ளிட்ட பலர் இணைந்து நடிக்கின்றனர்.