கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’ நாவலை இயக்குநர் மணிரத்னம் 2 பாகங்களாக திரைப்படமாக்கி இருக்கிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்துள்ள இந்தப் படத்துக்கு ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்துள்ளார். முதல் பாகம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியாகி தமிழ் சினிமாவில் அதிகம் வசூல் செய்த படங்களில் ஒன்றாக மாறியது. லைகா நிறுவனமும் மெட்ராஸ் டாக்கீஸும் இணைந்துத் தயாரித்திருந்த இந்தப் படத்தில் ஜெயம் ரவி, விக்ரம், கார்த்தி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி, சரத்குமார், பார்த்திபன் உட்பட பலர் நடித்துள்ளனர்.
இதன் இரண்டாம் பாகம், ஏப்ரல் 28 அன்று வெளியாகிறது. முதல் பாகம் அதிக வரவேற்பைப் பெற்றதால், இரண்டாம் பாகத்துக்கும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்நிலையில் இந்தப் படத்தின் பாடல் வெளியீடு ஏப்ரல் 5ம் தேதி சென்னையில் பிரம்மாண்டமாக நடத்தப்பட இருப்பதாகக் கூறப்படுகிறது.