ராஜமவுலி இயக்கத்தில் ஜூனியர் என்.டி.ஆர், ராமசரண், ஆலியா பட், அஜய்தேவ்கன் உட்பட பலர் நடித்து வெற்றி பெற்ற படம், ‘ஆர்ஆர்ஆர்’. இந்தப்படத்தில் இடம்பெற்றுள்ள ‘நாட்டு நாட்டு’ பாடலுக்கு கோல்டன் குளோப் விருது கிடைத்துள்ள நிலையில், ஆஸ்கர் விருதுக்கும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அமெரிக்கா சென்றுள்ள ராம்சரண் அங்குள்ள சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறும்போது, “ராஜமவுலியின் மிகச்சிறந்த எழுத்துக்களில் இந்தப் படமும் ஒன்று. அவர் இந்தியாவின் ஸ்பீல்பெர்க் என்று அழைக்கப்படுகிறார். விரைவில் சர்வதேச சினிமாவுக்கு வருவார் என நம்புகிறேன். ‘நாட்டு நாட்டு’ பாடலுக்கு முதல் முறையாக கோல்டன் குளோப் விருது கிடைத்ததை, இந்திய சினிமாவுக்கான மரியாதையாகப் பார்க்கிறேன். அகாடமி விருதுகள், விமர்சகர்கள் விருதுகள் எங்களை அங்கீகரிப்பது இதுவே முதன் முறை. இது ‘ஆர்ஆர்ஆர்’ படத்துக்கானது மட்டுமல்ல, இந்திய சினிமாவுக்கானது” என்றார்.