அமெரிக்காவின் பிரபலமான 'குட்மார்னிங் அமெரிக்கா' நிகழ்ச்சியில் நடிகர் ராம்சரண் பங்கேற்றது குறித்து நடிகர் சிரஞ்சீவி நெகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் பிரபல நிகழ்ச்சியான ‘குட்மார்னிங் அமெரிக்கா’ நிகழ்ச்சியில் நடிகர் ராம்சரண் கலந்து கொண்டுள்ளார். இதன் மூலம் தென்னிந்திய நடிகர்களில் குறிப்பாக தெலுங்கு நடிகர்களில் முதன்முறையாக இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரபலம் என்ற பெருமையை ராம் சரண் பெற்றிருக்கிறார். இதற்கு முன்பு ‘குட்மார்னிங் அமெரிக்கா’ நிகழ்ச்சியில் நடிகை பிரியங்கா சோப்ரா பலமுறை கலந்து கொண்டுள்ளார்.
இந்நிலையில் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய நடிகர் ராம் சரண், “ராஜமவுலி அடுத்த படம் மூலம் விரைவில் உலக சினிமாவில் கால் பதிப்பார். அவரது அடுத்த படத்தில் மகேஷ்பாபு நடிப்பார். ராஜமவுலி இந்தியாவின் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்” என்றும் அவர் தெரிவித்தார்.
இதுகுறித்து, ராம்சரணின் தந்தையும், நடிகருமான சிரஞ்சீவி தனது ட்விட்டர் பக்கத்தில், “இந்த நிகழ்ச்சியில் ராம்சரண் கலந்து கொண்டது இந்திய சினிமாவுக்கும் மற்றும் தெலுங்கு திரையுலகுக்கும் பெருமையானது. ராஜமவுலியின் தொலைநோக்குப் பார்வை மூலம் பெரிய வெற்றி சாத்தியமாகியுள்ளது. வாழ்த்துகள்! " என பெருமையாக பகிர்ந்துள்ளார்.