நடிகர் மோகன்லால், அவருடைய நெருங்கிய நண்பர் அந்தோணி பெரும்பாவூரின் ஆசிரவாத் பிலிம்ஸ் தயாரிக்கும் படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். ‘த்ரிஷ்யம்’, ‘புலிமுருகன்’, ‘லூசிஃபர்’, ‘மரைக்காயர்’ உட்பட பல்வேறு படங்களை இந்நிறுவனம் தயாரித்துள்ளது.
இந்நிலையில், இருவருக்குமான நிதி பரிவர்த்தனை, லாப பகிர்வு உள்ளிட்டவை குறித்து கடந்த 2 மாதத்துக்கு முன் வருமான வரித்துறை சோதனை நடத்தியது. அதன் தொடர்ச்சியாக கொச்சியில் உள்ள மோகன்லாலின் வீட்டுக்கு நேற்று முன்தினம் சென்ற வருமான வரித்துறையினர், 4 மணி நேரம் ஆய்வு செய்தனர்.
பின்னர் நிதி பரிவர்த்தனை தொடர்பான அவர் வாக்குமூலத்தைப் பதிவு செய்தனர். முன்னதாக அந்தோணி பெரும்பாவூரின் வாக்குமூலத்தையும் பதிவு செய்தனர். வெளிநாட்டு வங்கிக் கணக்குகள் தொடர்பான ஆவணங்களையும் ஆய்வு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
கேரளாவில் கடந்த டிசம்பர் மாதம் சினிமா தயாரிப்பாளர்கள், நடிகர்கள் வீடுகளில் வருமான வரித்துறை திடீர் சோதனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.