23 நாட்கள் தொடர் சிகிச்சை - தெலுங்கு நடிகர் நந்தமுரி தாரக ரத்னா 39 வயதில் காலமானார்

By செய்திப்பிரிவு

பிரபல தெலுங்கு சினிமா நடிகரும், ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் என்டி ராமராவ்வின் பேரனுமான நந்தமுரி தாரக ரத்னா மரணமடைந்தார். அவருக்கு வயது 39.

என்டி ராமாராவ்வின் பேரன் நந்தமுரி தாரக ரத்னா. பிரபல சினிமா ஒளிப்பதிவாளரும் என்டி ராமாராவ்வின் ஐந்தாவது மகன் மோகனகிருஷ்ணா இவரின் தந்தை. நந்தமுரி தாரக ரத்னா 2002ல் தெலுங்கு சினிமாவில் நடிகராக அறிமுகமானார். அதன்பிறகு பதாத்ரி ராமுடு, அமராவதி, நந்தீஸ்வரது, மனமந்தா, எதிரிலேனி அலாக்செண்டர், ராஜா செய் வேஸ்தே போன்ற பல படங்களில் நடித்தார். தொடர்ந்து முக்கிய வேடங்களில் நடித்து வந்தவர், 2009ம் ஆண்டு அமராவதி படத்தில் நடித்ததற்காக ஆந்திர மாநில அரசின் நந்தி விருதை வென்றார்.

முழுநேர அரசியலில் நுழைய முடிவு செய்து, சமீப காலமாக தெலுங்கு தேசம் கட்சியிலும் இணைந்து பணியாற்றிவந்தார். கடந்த ஜனவரி 27ம் தேதி சந்திரபாபு நாயுடு மகன் நரலோகேஷின் பாதயாத்திரையில் கலந்துகொண்டார். குப்பம் தொகுதியில் நடந்த பாதயாத்திரையில் கலந்துகொண்டபோது அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

மேல் சிகிச்சைக்காக பெங்களூரு நாராயண ஹ்ருதயாலயா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார். கடந்த 23 நாட்களாக சிகிச்சை பெற்றுவந்த நிலையில் இன்று மாலை அவருக்கு மீண்டும் மாரடைப்பு ஏற்பட்டது. இம்முறை அவரை காப்பாற்ற முடியவில்லை.

அவரின் மறைவு என்டி ராமாராவ் குடும்பத்தில் மட்டுமில்லாமல், தெலுங்கு சினிமாவில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE