“லவ் டுடே படம் உலக அளவில் ரூ.100 கோடி வசூலை தாண்டிவிட்டது. இது உங்களால்தான் சாத்தியமானது.நன்றி” என ‘லவ் டுடே’ படத்தின் இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் தெரிவித்துள்ளார்.
‘லவ் டுடே’ படத்தின் 100-வது நாள் வெற்றி விழா சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய நடிகரும் இயக்குநருமான பிரதீப் ரங்கநாதன், “படம் 100 நாள் ஓடிவிட்டது. தயாரிப்பாளரிடம் “படம் 100 நாள் படம் ஓடிவிட்டது. எத்தனை கோடி வசூல் செய்தது?’ என கேட்டேன். அதற்கு அவர், ‘படம் உலக அளவில் ரூ.100 கோடி வசூலை தாண்டிவிட்டது’ என கூறினார்.
அதைத் தவிர்த்து மற்ற ஓடிடி, சாட்டிலைட் பிசினஸும் உண்டு. இது உங்களால்தான் சாத்தியமானது. நன்றி. நான் இந்தப் படம் செய்யவேண்டும் என நினைக்கும்போது, என் நண்பர்கள், ‘லவ் டுடே’ ஒரு மலையைப் போல என்றார்கள்.
அப்படி இந்தப் படத்தில் நான் மொக்கை வாங்கிவிட்டால், அதிலிருந்து வெளியே வருவது கஷ்டம். நாயகனாக நடித்து தோல்வியடைந்தால் பல அவமானங்களை சந்திக்க வேண்டும். நான் யோசித்தேன். ஆனால், அந்த மலையை ஏற என்ன செய்ய வேண்டும் என முடிவெடுத்து அதன்படி செயல்பட்டேன்.
நீங்கள் உங்கள் வாழ்க்கையில் ஒரு செயலை செய்யும்போது மிகவும் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறோமே என யோசித்தால், பெரிய மலையை ஏறிக்கொண்டிருக்கிறீர்கள் என்பதை மட்டும் மனதில் வைத்துக்கொள்ளுங்கள்” என்றார் இயக்குநர் பிரதீப் ரங்கநாதன்.