“எந்த சமூகத்தையும் எதிர்க்க நான் சினிமாவுக்கு வரவில்லை” - இயக்குநர் மோகன்.ஜி

By செய்திப்பிரிவு

“எந்த சமூகத்தையும் எதிர்த்து படம் எடுக்க சினிமாவுக்கு வரவில்லை. பா.ரஞ்சித் என் நண்பர்தான்” என இயக்குநர் மோகன்.ஜி தெரிவித்துள்ளார்.

செல்வராகவன், நட்டி நடிப்பில் இயக்குநர் மோகன்.ஜி இயக்கியுள்ள ‘பகாசூரன்’ படம் வரும் பிப்ரவரி 17-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்நிலையில், இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைப்பெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய இயக்குநர் மோகன்.ஜி, “எனக்கு இந்தப் படத்தை தயாரிக்கும் ஐடியா இல்லை. வேறு வழியில்லாமல் படத்தை தயாரிக்க வேண்டியதாயிற்று.

பலரும் படத்தை முடிக்க உதவியாக இருந்தனர். சாட்டிலைட் உரிமை வாங்கி கலைஞர் தொலைக்காட்சிக்கு நன்றி. இயக்குநராக வெற்றி பெற்றுவிட்டேன். தயாரிப்பாளராக வெற்றி பெறுவேனா என்பது மக்கள் கையில் உள்ளது. நல்ல படத்தை இயக்கியிருக்கிறோம். தரமான படமாக உருவாகியுள்ளது.

நானும் செல்வராகவனும் நிறைய பேசியிருக்கிறோம். செல்வராகவனைப் பார்த்து தான் நான் சினிமாவுக்கே வந்தேன். தினமும் அவரிடம் ஆசீர்வாதம் வாங்குவேன். நட்டி நட்ராஜை மனதில் வைத்து தான் படத்தை எழுதினேன். அவரும் வந்து நடித்திருப்பது மகிழ்ச்சி.

இது அனைவருக்குமான படம். எந்த சமூகத்தையும் எதிர்த்து படம் செய்ய சினிமாவுக்கு வரவில்லை. நானும், பா.ரஞ்சித்தும் குறிப்பிட்ட சமூகத்தினரை மையப்படுத்தி படம் எடுப்பதாக நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். பா.ரஞ்சித்தின் படங்களை நான் ட்விட்டரில் பாராட்டிக்கொண்டு தான் இருக்கிறேன். நானும் அவரும் ஃபேஸ்புக் நண்பர்கள்.

சினிமாவில் நான் யாரையும் எதிரியாகவும், நண்பராகவும் பார்க்கவில்லை. சினிமாவில் சமநிலை வேண்டும். இனி வரும் படங்களில் என் பொறுப்புணர்வு அதிகரிக்கும். சமூக மாற்றத்தை கொண்டு வரும் படங்களை இயக்குவேன். சாதி இருக்கிறது என நான் சொல்லும்போது திட்டினார்கள். வெற்றிமாறன் சொல்லும்போது பாராட்டுகிறார்கள். யார் சொல்வது என்பதுதான் இங்கே முக்கியம்” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE