பிரதமர் நரேந்திர மோடியை நடிகர்கள் ‘கேஜிஎஃப்’ புகழ் யஷ்,‘காந்தாரா’ புகழ் ரிஷப் ஷெட்டி ஆகியோர் சந்தித்துப் பேசியுள்ளனர். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
‘கேஜிஎஃப்’ மூலம் இந்திய சினிமாவையே திரும்பி பார்க்க வைத்தவர் நடிகர் யஷ். ‘காந்தாரா’ படத்தின் மூலம் குறைந்த பட்ஜெட்டில் அதீத வசூலை குவிக்க முடியும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தி தனி முத்திரை பதித்தவர் ரிஷப் ஷெட்டி. இயக்குநராகவும், நடிகராகவும் தன்னை இந்திய மனங்களில் நிலை நிறுத்திக்கொண்டுள்ளார்.
இந்நிலையில் பெங்களூருவில் யெலஹங்கா விமான நிலையத்தில் ‘ஏரோ இந்தியா 2023’ நிகழ்ச்சியை தொடங்கி வைப்பதற்காக வந்த பிரதமர் மோடியை நடிகர்கள் யஷ் மற்றும் ரிஷப் ஷெட்டி சந்தித்துள்ளனர்.
பெங்களூருவில் உள்ள ராஜ்பவனில் நடைபெற்ற இந்தச் சந்திப்பில் மறைந்த நடிகர் புனித் ராஜ்குமாரின் மனைவி அஸ்வினியும் உடனிருந்தார். இந்தச் சந்திப்பில் சினிமா, கர்நாடகாவின் கலாச்சாரம், பண்பாடு குறித்து விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்தப் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் இப்போது வைரலாக பரவி வருகின்றன.