ஹைதராபாத்: இந்திய சினிமா ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகர்களில் ஒருவராக அறியப்படுகிறார் நடிகர் அல்லு அர்ஜுன். அவரது ரசிகர் ஒருவருடைய தந்தையின் மருத்துவ சிகிச்சைக்கு நிதியுதவி அளித்து உதவியுள்ளார் அவர். அதை அறிந்த ரசிகர்கள் அவரது செயலை புகழ்ந்து வருகின்றனர்.
அண்மையில் அவரது ரசிகர் மன்றம் சார்பில் ஒரு பதிவு சமூக வலைதளத்தில் போஸ்ட் செய்யப்பட்டது. அதில் ரசிகர்களான தங்களில் ஒருவருக்கு நிதியுதவி தேவைப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. அதுவும் நுரையீரல் தொடர்பான நோயால் பாதிக்கப்பட்ட அந்த ரசிகருடைய தந்தையின் மருத்துவ சிகிச்சைக்காக இந்த உதவி வேண்டும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் உதவியாக கேட்ட தொகை ரூ.2 லட்சம். அது அல்லு அர்ஜுனின் கவனத்திற்கு சென்றுள்ளது.
ரசிகர்களில் ஒருவருடைய இந்த நிலையை அறிந்ததும் அவரது குடும்பத்திற்கு தேவையான உதவிகளை நடிகர் அல்லு அர்ஜுன் தனது குழுவினர் மூலம் செய்துள்ளார் என அதே ரசிகர் மன்றம் தற்போது சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளது. அந்த பதிவில் அல்லு அர்ஜுனை ‘சாமி’ என்றும் ரசிகர்கள் சொல்லி உள்ளனர்.
தற்போது இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் ‘புஷ்பா 2’ படத்தில் அல்லு அர்ஜுன் நடித்து வருகிறார். வரும் 2024-ல் இந்தப் படம் வெளியாகும் என தெரிகிறது.