‘அவர்கள் சக நடிகர்கள் மட்டுமே...’ - பிரபாஸ் திருமண நிச்சயம் குறித்து நண்பர்கள் விளக்கம்

By செய்திப்பிரிவு

நடிகர்கள் பிரபாஸுக்கும், கீர்த்தி சனோனுக்கும் அடுத்த வாரம் மாலத்தீவில் நிச்சயதார்த்தம் நடைபெறவுள்ளதாக வெளியான தகவல் வதந்தி என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் பிரபாஸ், ‘பாகுபலி’ மூலம் நாடு முழுவதும் பிரபலமானார். இதையடுத்து அவர் நடிக்கும் படங்கள் பான் இந்தியா முறையில் வெளியாகி வருகின்றன. 42 வயதான பிரபாஸ் இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை. அவர் நடிகை அனுஷ்காவை காதலித்து வருவதாகக் கூறப்பட்டது. அதை இருவரும் மறுத்தனர்.

தொடர்ந்து நடிகர் பிரபாஸூம், நடிகை கிருத்தி சனோனும் காதலித்து வருவதாகவும், இருவரும் டேட்டிங்கில் ஈடுபட்டிருப்பதாகவும் செய்திகள் வெளியானது. இதற்கு நடிகை கிருத்தி சனோன் மறுப்பு தெரிவித்திருந்தார். இந்நிலையில் இவர்கள் இருவருக்கும் திருமண நிச்சயம் விரைவில் நடைபெறவிருக்கிறது என தகவல் வெளியானது.

இது தொடர்பாக பிரபாஸின் நெருங்கிய நட்பு வட்டாரம் விளக்கமளித்து பேசுகையில், “இந்த செய்தி முற்றிலும் பொய். இந்த செய்தியில் உண்மை இல்லை. இது வதந்தி. இவர்கள் இருவரும் 'ஆதிபுரூஷ்' படத்தில் நடிக்கும் சக நடிகர்கள் மட்டும்தான். பரபரப்பாக பேசப்படும் இந்த கதையில் சிறிதளவும் உண்மை இல்லை. இது யாரோ ஒருவரின் கற்பனை. இவர்கள் பரப்பும் செய்தியை யாரும் நம்ப வேண்டாம்” என்றனர்.

பாலிவுட் இயக்குநர் ஓம் ராவத் இயக்கத்தில் 'ஆதிபுரூஷ்' எனும் திரைப்படத்தில் நடிகர் பிரபாஸூம், நடிகை கிருத்தி சனோனும் இணைந்து நடித்து வருகிறார்கள். இவர்களுடன் சையீப் அலி கான், சன்னி சிங் மற்றும் வத்ஸல் ஷெத் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் எதிர்வரும் ஜூன் மாதம் 16ஆம் தேதி அன்று திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE