‘காந்தாரா 2’ அடுத்த ஆண்டு ரிலீஸ் - உறுதி செய்த ரிஷப் ஷெட்டி

By செய்திப்பிரிவு

‘காந்தாரா 2’ படம் அடுத்த ஆண்டு வெளியாகும் என அப்படத்தின் இயக்குநர் ரிஷப் ஷெட்டி தெரிவித்துள்ளார்.

ரிஷப் ஷெட்டி நடித்து இயக்கிய ‘காந்தாரா’ திரைப்படம் கன்னடத்தில் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்றது. இந்தப் படத்தின் வரவேற்பு காரணமாக பான் இந்தியா முறையில் மற்ற மொழிகளிலும் படம் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. இதன் பயனாக ரூ.16 கோடியில் உருவான இப்படம் ரூ.400 கோடிக்கும் மேல் வசூலித்து இமாலய சாதனை படைத்தது. ‘காந்தாரா’ வெளியாகி 100 நாட்களை நிறைவு செய்துள்ள நிலையில், இது தொடர்பான வெற்றி விழா ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதில் கலந்துகொண்டு பேசிய நடிகரும் இயக்குநருமான ரிஷப் ஷெட்டி, “தற்போது வெளியாகியிருப்பது ‘காந்தாரா’ படத்தின் இரண்டாம் பாகம்தான். கதைப்படிப் பார்த்தால் முதல் பாகம் அடுத்த ஆண்டு வெளியாகும். படத்தில் இடம்பெற்ற தெய்வத்தின் பின்னணி பற்றி சொல்லப்படும் கதைதான் அடுத்த பாகத்தில் இருக்கும்.‘காந்தாரா’வின் வரலாறு இன்னும் ஆழமானது. அதைத்தான் அடுத்த வரும் பாகத்தில் சொல்லவிருக்கிறோம்.

அது தொடர்பான ஆய்வில் ஈடுபட்டிருக்கின்றோம். இந்த ஆய்வு ஆரம்பக்கட்டத்தில் இருப்பதால் இது குறித்து நிறைய விஷயங்களை தற்போது சொல்ல முடியாது. விரைவில் படம் குறித்து அறிவிப்பு வெளியாகும்” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE