ஷாருக்கான் நடிப்பில் வெளியான ‘பதான்’ திரைப்படம் உலகம் முழுவதும் ரூ.832 கோடியை வசூலித்துள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படம் விரைவில் ‘ஆர்ஆர்ஆர்’ வசூலை எட்டும் என கணிக்கப்பட்டுள்ளது.
ஷாருக்கான், தீபிகா படுகோன், ஜான் ஆபிரஹாம் நடித்து கடந்த 25-ம் தேதி வெளியான இந்திப் படம், ‘பதான்’. இப்படத்தை சித்தார்த் ஆனந்த் இயக்கியுள்ளார். ‘பேஷரம் ரங்’ பாடல் காட்சியில் தீபிகா அணிந்திருந்த காவி பிகினி, சர்ச்சையை ஏற்படுத்தியது. இப்படத்துக்கும் கடும் எதிர்ப்பு கிளம்பியது.
இந்த எதிர்ப்புகளை மீறி ‘பதான்’ வசூலில் சாதனைப் படைத்து வருகிறது. 4 ஆண்டுகளுக்குப் பிறகு ஷாருக்கான் நடித்த படம் என்பதால், ரசிகர்கள் தியேட்டரில் குவிந்து வருகின்றனர். முதல் நாளில் உலகம் முழுவதும் ரூ.106 கோடி வசூல் அள்ளிய இந்தப் படம் அடுத்தடுத்த நாட்களிலும் ரூ.100 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது. 4 நாட்களில் ரூ.400 கோடிக்கு மேல் வசூல் குவித்திருந்தது. 8 நாட்கள் முடிவில் படம் உலகம் முழுவதும் ரூ.667 கோடியை வசூலித்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்திருந்தது.
தற்போது படம் வெளியாகி 12 நாட்கள் ஆன நிலையில், உலக அளவில் படம் ரூ.832 கோடியை வசூலித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் மட்டும் ரூ.515 கோடியை வசூலித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. விரைவில் ‘பதான்’ திரைப்படம் ‘ஆர்ஆர்ஆர்’ படத்தின் ஒட்டுமொத்த வசூலான ரூ.1200 கோடியை எட்டும் என கணிக்கப்பட்டுள்ளது.
» உலக அளவில் ரூ.250 கோடியைத் தாண்டிய அஜித்தின் ‘துணிவு’ வசூல்
» “வியாபாரம் ஆகிவிட்ட கல்வி முறை குறித்து ‘வாத்தி’ அழுத்தமாக பேசும்” - இயக்குநர் வெங்கி அட்லூரி