‘நகைச்சுவையோடு சொல்வதன் வலிமை அறிந்தவர்” - டி.பி.கஜேந்திரன் மறைவுக்கு கமல் இரங்கல்

By செய்திப்பிரிவு

இயக்குநரும் நடிகருமான டி.பி.கஜேந்திரன் மறைவுக்கு நடிகர் கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “எந்த விஷயத்தையும் நகைச்சுவையோடு சொல்வதன் வலிமையை அறிந்தவர் இயக்குநர் திரு டிபி கஜேந்திரன். அவருக்கான இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்” எனப் பதிவிட்டுள்ளார்.

டி.பி.கஜேந்திரன் பிரபல இயக்குநர்களான கே.பாலசந்தர், விசு,, ராம நாராயணன் ஆகியோரிடம் டி.பி.கஜேந்திரன் உதவி இயக்குநராகப் பணியாற்றி இருக்கிறார். 60க்கும் மேற்பட்ட படங்களில் அவர் உதவி இயக்குநராகப் பணியாற்றியுள்ளார். பின்னர் இயக்குநராக அவதரித்தார். 1988 ஆம் ஆண்டு வீடு மனைவி மக்கள் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். ராமராஜனின் எங்க ஊரு காவல்காரன், கார்த்திக்கின் பாண்டி நாட்டுத் தங்கம், பிரபு நடிப்பில் பட்ஜெட் பத்மநாபன், பிரசன்னா நடிப்பில் சீனா தானா போன்ற குடும்பங்கள் கொண்டாடும் ஜனரஞ்சகமான படங்களை இயக்கி மக்கள் அபிமானத்தைப் பெற்றார்.

இதுதவிர 40க்கும் மேற்பட்ட படங்களில் குணச்சித்திர நடிகராக நடித்திருக்கிறார். கமல்ஹாசனின் பம்மல் கே சம்பந்தம் படத்தில் திரைப்பட இயக்குநராக அவர் நடித்த காட்சிகள் மிகவும் பிரபலம். ’ட்ராலி ஃபார்வர்டு’ என்று அவர் கூறும் வசனமும் ட்ரெண்டில் இருந்தது. நேற்று காலை அவர் உயிரிழந்தார். உடல்நலக் குறைவு காரணமாக அவர் உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அவர் இதய நோய்க்காக அறுவை சிகிச்சை செய்து கொண்டு வீட்டில் இருந்தபடியே ஓய்வு எடுத்துவந்தார். அவரை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து உடல்நலம் விசாரித்தார். இந்நிலையில் நேற்று (பிப்.5) காலை டி.பி.கஜேந்திரனின் உயிர் பிரிந்தது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE