வேலூரில் துரைசாமி ஐயங்கார்- பத்மாவதி தம்பதிக்கு ஐந்தாவது குழந்தை யாகப் பிறந்தவர் வாணி ஜெயராம். இவருக்கு பெற்றோர் வைத்த பெயர் கலைவாணி.
5 வயதிலேயே முறைப்படி இசை கற்க ஆரம்பித்தார். சென்னை குயின் மேரிஸ் கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்த அவர், சென்னை பாரத ஸ்டேட் வங்கியில் பணிபுரிந்தார். பின்னர், மும்பை சென்றார். அவருடைய இசை ஆர்வத்தை அறிந்த அவர் கணவர் ஜெயராம், ஹிந்துஸ்தானி இசைப் பயிலவைத்தார். உஸ்தாத் அப்துல் ரஹ்மான் கானிடம் இசை பயின்ற அவர், கஜல் இசையையும் கற்றுக்கொண்டு 1969-ம் ஆண்டு முதல் இசை நிகழ்ச்சியை பொதுமேடையில் நடத்தினார்.
பிறகு, வேலையை விட்டு இசையை தனது முழு நேரப் பணியாக மாற்றிக் கொண்டார். 1971-ம் ஆண்டு இந்தியில் வெளியான ‘குட்டி’ (Guddi) என்ற படம் மூலம் சினிமாவில் பாடகியாக அறிமுகமானார். அதில் ‘போலே ரே பப்பி ஹரா’ என்ற பாடலை அவர் பாடியிருந்தார். தமிழில், சுப்பையா நாயுடு இசையில் ‘தாயும் சேயும்’ என்ற படத்தில் தனது முதல் பாடலை பாடினார். இந்தப் படம் வெளிவரவில்லை.
அதே வருடத்தில் சங்கர்-கணேஷ் இசையில் ‘வீட்டுக்கு வந்த மருமகள்’ படத்தில் ‘ஓரிடம்…’ என்ற டூயட் பாடலை டி.எம்.சவுந்தரராஜனுடன் பாடினார். ஆனாலும் ‘தீர்க்க சுமங்கலி’ படத்தில் இவர் பாடிய 'மல்லிகை என் மன்னன் மயங்கும்' என்ற பாடல் தான் அவரை தமிழில் அதிகம் கவனிக்க வைத்தது.
» புகழஞ்சலி - வாணி ஜெயராம் | “அவர் பாடல்கள் நம்மிடம் இருக்கும்” - ஆளுநர், கனிமொழி, கமல் பகிர்வு
» “வாணி ஜெயராம் இனிமையான குரலால் நினைவுகூரப்படுவார்” - பிரதமர் மோடி புகழஞ்சலி
இவர் பாடிய கே.பாலசந்தரின் ‘அபூர்வ ராகங்கள்’ படத்தில் இடம்பெற்ற ‘ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனைப் பாடல்..’ என்ற பாடல், அவருக்குத் தேசிய விருதைப் பெற்றுத்தந்தது. அதே படத்தில் இடம்பெறும் ‘கேள்வியின் நாயகனே’, ‘ரோசாப்பூ ரவிக்கைக்காரி’ படத்தில் ‘என்னுள்ளில் எங்கோ, ஏங்கும் கீதம்’, ‘உல்லாசப் பறவைகள்’ படத்தில் ‘தெய்வீக ராகம்’, வைதேகி காத்திருந்தாள்’ படத்தில் ‘இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே’, 'அழகே உன்னை ஆராதிக்கிறேன்' படத்தில் 'நானே நானா' உட்பட பல சூப்பர் ஹிட் பாடல்களைப் பாடியுள்ளார்.
தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் உட்பட 19 மொழிகளில் 10 ஆயிரத்துக்கும் அதிகமானப் பாடல்களைப் பாடியிருக்கும் வாணி ஜெயராம், எம்.எஸ்.விஸ்வநாதன், கே.வி.ம காதேவன், சங்கர் கணேஷ், இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் உட்பட பல்வேறு இசை அமைப்பாளர்களின் இசையில் பாடியுள்ளார்.
சிறந்தப் பாடகிக்கான தேசிய விருதை மூன்று முறை பெற்றுள்ள வாணி ஜெயராம், தமிழ், தெலுங்கு, குஜராத், ஒடிஷா மாநில விருதுகளையும் பெற்றுள்ளார். மத்திய அரசு சமீபத்தில் இவருக்கு பத்மபூஷண் விருது அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
வாணி ஜெயராமின் கணவர் கடந்த 2018-ம் ஆண்டு இறந்துவிட்டார். அதன் பிறகு தனியாக வசித்து வந்தார். அவர் மறைவு ரசிகர்களிடையே பெரும்சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.