தமிழின் மகத்தான பின்னணி பாடகரான வாணி ஜெயராம் மறைவுக்கு பாடகர்கள் வேல்முருகன், மனோ, நடிகர்கள் குஷ்பு, ராதிகா உள்ளிட்டோர் புகழஞ்சலி செலுத்தியுள்ளனர்.
பாடகர் வேல்முருகன்: “நாளை அவரைக் காணயிருந்தேன். ஆனால், இப்படி நிகழ்ந்துவிட்டது. வசீகரிக்கும் குரலுக்குச் சொந்தக்காரர். பத்ம பூஷண் வாங்கும் இந்த நேரத்தில் அவரின் மறைவு இசைத் துறைக்கு மிகப் பெரிய இழப்பு. அவரது குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல்கள்.”
பின்னணி பாடகர் மனோ: “பத்ம பூஷண் விருதுக்கு தகுதியுள்ள அற்புதமான பாடகர் வாணியம்மா. அவருடன் இணைந்து நிறைய பாடல்களை பாடியுள்ளேன். ஒரு பெரிய விருது வாங்குவதற்கு முன் இப்படி நடந்துவிட்டது என்பதை தாங்க முடியவில்லை. நம்ப முடியாத செய்தி இது. அற்புதமான தேன் குரலுக்கு சொந்தக்காரர் அவர். என்ன சொல்வதென்றே தெரியவில்லை. அவரது ஆன்மா சாந்தியடைய வாழ்த்துகள்” என தெரிவித்துள்ளார்.
குஷ்பு: “நாம் அனைவரும் உன்னதமான ஒருவரை இழந்துவிட்டோம். பல வருடங்களாக நம்மைக் கவர்ந்த ஒரு குரல் இன்று நம்மை நொறுங்கச் செய்துவிட்டது. அவரின் இனிமையான, மென்மையான இயல்பு குரலில் பிரதிபலித்தது. நீங்கள் என்றும் நினைவில் இருப்பீர்கள் அம்மா” என பதிவிட்டுள்ளார்.
ராதிகா: “வாணி ஜெயராம் மறைவு செய்தி மிகவும் அதிர்ச்சியளிக்கிறது.நேற்று இரவு தான் அவரது பாடலை கேட்டுவிட்டு, கே.விஸ்வநாத் சார் படத்தில் அவர் பாடலை எவ்வளவு அழகாக பாடுகிறார் என்று என் கணவரிடம் கூறினேன். இந்தச் செய்தி பேரதிர்ச்சி” என பதிவிட்டுள்ளார்.
இசையமைப்பாளர் டி.இமான்: “பழம்பெரும் பாடகர் வாணி ஜெயராம் அம்மா இப்போது இல்லை என்ற கடினமான யதார்த்தத்தை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. "மாலை" படத்திற்காக கடந்த ஆகஸ்ட் மாதம் அவரை சந்தித்து பாடலை பதிவு செய்தேன். அவர் இன்று இல்லை என்பது பெரும் அதிர்ச்சியாக உள்ளது. ஆழ்ந்த இரங்கல்.”
பிரபல பின்னணி பாடகர் வாணி ஜெயராம் சென்னையில் உள்ள அவரது வீட்டில் சனிக்கிழமை காலமானார். அவருக்கு வயது 78. அண்மையில் அவருக்கு பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. அவரது மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், குஜராத்தி, இந்தி, உட்பட பல்வேறு மொழிகளில் பாடல்களை பாடியுள்ளார் வாணி ஜெயராம். 1000-க்கும் அதிகமான படங்களில் 10,000-க்கு அதிகமான பாடல்களை பாடிய வாணி ஜெயராமுக்கு, இந்த ஆண்டு குடியரசு தினத்தையொட்டி பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டிருந்தது. சிறந்த பாடகருக்கான தேசிய விருதை 3 முறை வென்றவர், 19 மொழிகளில் பாடல்களை பாடியுள்ளார். தமிழகம், ஆந்திரா, குஜராத், ஒடிசா மாநில அரசுகளின் விருதுகளைப் பெற்றவர்.
‘ஏழு சுவரங்களுக்குள் எத்தனை பாடல்’, ‘நித்தம் நித்தம் நெல்லுச்சோறு’, ‘மல்லிகை என் மன்னன் மயங்கும் பொன்னான மலரல்லவோ’, ‘என்னுள்ளில் எங்கோ ஏங்கும் கீதம்’,‘நீ கேட்டால் நான் மாட்டேன் என்றா சொல்வேன்’, ‘ஏபிசி நீ வாசி’ உள்ளிட்ட பல்வேறு தமிழ் பாடல்களில் ரசிகர்களின் நெஞ்சை அள்ளியவர் என்பது குறிப்பிடத்தக்கது.