‘பரியேறும் பெருமாள்' படத்தில் நடித்த தெருக்கூத்து கலைஞர் நெல்லை தங்கராஜ் மறைவுக்கு இயக்குநர் மாரி செல்வராஜ் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ‘பரியேறும் பெருமாள்’. சமூக நீதிக்கான குரல் ஓங்கி ஒலித்த அந்தப் படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றது. அந்தப் படத்தில் ஒரு சில காட்சிகளிலேயே வந்தாலும் அழுத்தமான பாத்திரத்தால் அனைவரின் மனங்களையும் வென்றவர் நெல்லை தங்கராஜ்.
அவரைப் போன்ற பெண் வேடமிட்டு தெருக்கூத்தில் ஈடுபடும் கலைஞர்களின் வேதனையின் குரலாகவும் படத்தில் காட்சிப்படுத்தியிருப்பார் இயக்குநர் மாரி செல்வராஜ். அழுத்தமிக்க அந்த கதாபாத்திரத்திற்கு தனது இயல்பான நடிப்பால் உயிர் கொடுத்திருப்பார் நெல்லை தங்கராஜ். இந்நிலையில் இன்று அதிகாலை அவர் உயிர் பிர்ந்தது. அவரது மறைவிற்கு திரையுலகினர், கலைஞர்கள், ரசிகர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் இயக்குநர் மாரி செல்வராஜ் தனது ஃபேஸ்புக் பக்கத்தில், “ஆங்காரமாய் ஆடியது போதும் இளைப்பாறுங்கள் அப்பா. என் கடைசி படைப்பு வரையிலும் உங்கள் பாதச்சுவடிருக்கும் .. பரியேறும் பெருமாள்” என பதிவிட்டு இரங்கல் தெரிவித்துள்ளார்.
» ‘பரியேறும் பெருமாள்' புகழ் நெல்லை தங்கராஜ் காலமானார்
» கே.விஸ்வநாத் மறைவு | திரைக் கலைஞர்கள், தலைவர்கள், ரசிகர்கள் புகழஞ்சலி