“ஜமுனா அம்மாவிற்கு என் அஞ்சலி” - கமல்ஹாசன் 

By செய்திப்பிரிவு

பழம் பெரும் நடிகர் ஜமுனாவின் மறைவுக்கு நடிகர் கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

வயது மூப்பு காரணமாக பழம் பெரும் நடிகர் ஜமுனா ஹைதராபாத்தில் உள்ள அவரது வீட்டில் இன்று காலமானார். அவருக்கு வயது 86. அவரது மறைவுக்குத் திரையுலகப் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில், “சிறுவயதிலிருந்தே என்னை அறிந்தவர் ஜமுனா. அவர் நடித்த படங்களுக்கு நான் நடன உதவியாளராகவும், உதவி இயக்குனராகவும் பணியாற்றி இருக்கிறேன். பிற்பாடு பல படங்களில் அவர் எனக்கு அம்மாவாக நடித்திருக்கிறார். ஓர் அரசியல்வாதியாக மக்கள் பணியும் செய்தவர். ஜமுனா அம்மாவிற்கு என் அஞ்சலி” என பதிவிட்டுள்ளார்.

ஜமுனா: கர்நாடகாவில் உள்ள ஹம்பி என்ற ஊரில் நிப்பானி சீனிவாச ராவ்- கவுசல்யா தேவி ஆகியோருக்குப் பிறந்தவர் ஜமுனா. ஆந்திரப் பிரதேசத்தில் குண்டூர் மாவட்டத்திலுள்ள துக்கரிலாவில் வளர்ந்தார். ஜமுனா தனது 16 வயதிலிருந்தே திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கினார். கடந்த 1953-ம் ஆண்டு வெளியான ‘புட்டிலு’ என்கிற தெலுங்குப் படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். தமிழில் ‘பணம் படுத்தும் பாடு’ படத்தின் மூலம் அறிமுகமானவருக்கு ‘மிஸ்ஸியம்மா’ படம் புகழைத் தேடித் தந்தது.

‘தூங்காதே தம்பி தூங்காதே’ படத்தில் கமலுக்கு தாயாக நடித்திருந்தார். இந்தியிலும் பல்வேறு படங்களில் நடித்தவர், ஃபிலிம் ஃபேர் விருதையும் பெற்றிருந்தார். 100-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த ஜமுனா, 1989-ல் மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் சார்பாக ராஜமுந்திரி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 1990-களின் இறுதியில் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்து பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அவரின் மறைவு திரையுலகத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE