ரஜினியின் ‘பாபா’வை அடுத்து ரீரிலீஸ் ஆகிறது கமலின் ‘ஆளவந்தான்’

By செய்திப்பிரிவு

நடிகர் கமல்ஹாசனின் ‘ஆளவந்தான்’ திரைப்படம் மறுவெளியீடு செய்ய இருப்பதாக படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு தெரிவித்துள்ளார்.

கடந்த 2001-ம் ஆண்டு சுரேஷ்கிருஷ்ணா இயக்கத்தில் கமல்ஹாசனின் இரட்டை வேட நடிப்பில் வெளியானத் திரைப்படம் ‘ஆளவந்தான்’. ரவீனா டாண்டன், மனிஷா கொய்ராலா உள்ளிட்டோர் நடித்திருந்த இப்படத்திற்கு சங்கர்-எஹ்சான்-லாய் மற்றும் மகேஷ் மகாதேவன் இணைந்து இசையமைத்திருந்தனர்.

இந்தப் படம் வெளியானபோது பெரிய அளவில் கவனம் பெறவில்லை. இந்த நிலையில், இந்தப் படம் மீண்டும் டிஜிட்டல் வெர்ஷனில் வெளியாக இருப்பதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இது தொடர்பாக படத்தின் தயாரிப்பாளர் தாணு தனது ட்விட்டர் பக்கத்தில், “விரைவில் திரையரங்கில் உங்கள் உள்ளங்களை ஆள வருகிறான்” என பதிவிட்டுள்ளார்.

சமீபத்தில் நடிகர் ரஜினி நடித்து சுரேஷ் கிருஷ்ணா இயக்கி இருந்த ‘பாபா’ திரைப்படம் மறுவெளியீடு செய்யப்பட்டு, பார்வையாளர்களிடையே ஓரளவு வரவேற்பைப் பெற்றது. இதனையடுத்து, தற்போது ‘ஆளவந்தான்’ திரைப்படமும் இப்போதுள்ள தலைமுறையிடம் வரவேற்பைப் பெறும் என்ற நம்பிக்கையுடன் படம் வெளியிடப்பட உள்ளது. விரைவில், படம் வெளியாகும் தேதி குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியாகலாம்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE