விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்றுவரும் நடிகர் விஜய் ஆண்டனி தனது உடல் நிலை குறித்து ட்விட்டரில் விளக்கம் அளித்துள்ளார்.
விஜய் ஆண்டனி, ‘பிச்சைக்காரன் 2’ படத்தைத் தயாரித்து, இசை அமைத்து, நடித்து வருகிறார். இந்தப் படம் மூலம் இயக்குநராகவும் அறிமுகமாகிறார். அவர் ஜோடியாக காவ்யா தாப்பர் நடிக்கிறார். இந்தப் படத்துக்கான, பாடல் காட்சி கடந்த ஜனவரி 16-ம் தேதி லங்காவி தீவில் நடந்து வந்தது. கடலுக்குள் செலுத்தும் ‘ஜெட் ஸ்கை’ எனப்படும் பைக்கில் விஜய் ஆண்டனியும் காவ்யா தாப்பரும் செல்வதுபோல படமாக்கப்பட்டது.
அப்போது, எதிர்பாராத விதமாக மற்றொரு, ‘ஜெட் ஸ்கை’ வாகனத்தின்மீது, விஜய் ஆண்டனியின் வாகனம் பயங்கரமாக மோதியது. இதில் விஜய் ஆண்டனியின் முகத்தில் காயம் ஏற்பட்டது. அவர் உதடு, பற்களில் பலத்த காயம் ஏற்பட்டன. காவ்யா தாப்பர் காயமின்றி தப்பினார்.
உடனடியாக படக்குழுவினர், அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட விஜய் ஆண்டனிக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.தொடர்ந்து சென்னை திரும்பிய அவர் சிகிச்சையில் உள்ளார்.
» 100+ நாடுகள், 10 லட்சம் டிக்கெட்டுகள் விற்பனை - மாஸ் காட்டும் ஷாருக்கானின் ‘பதான்’
» கௌதம் கார்த்திக் - சரத்குமார் இணையும் ‘கிரிமினல்’ படப்பிடிப்பு தொடக்கம்
இந்நிலையில், இந்த விபத்து தொடர்பாகவும், தனது உடல்நிலை குறித்தும் விஜய் ஆண்டனி விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “மலேசியாவில் ‘பிச்சைக்காரன் 2’ படப்பிடிப்பின் போது தாடை மற்றும் மூக்கில் பலத்த காயத்தில் இருந்து நான் பாதுகாப்பாக மீட்கப்பட்டேன். ஒரு பெரிய அறுவை சிகிச்சை முடிந்துள்ளது. கூடிய விரைவில் உங்கள் அனைவரிடமும் பேசுவேன். என் உடல்நலனில் அக்கறை காட்டியதற்கும் உங்கள் உறுதுணைக்கும் நன்றி” என பதிவிட்டுள்ளார்.