கௌதம் கார்த்தி நடிக்கும் ‘கிரிமினல்’ படத்தின் படப்பிடிப்பு மதுரையில் தொடங்கியது. மொத்தப் படத்தையும் 40 நாட்களுக்குள் முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளது.
அறிமுக இயக்குநர் தக்ஷிண மூர்த்தி ராம்குமார் இயக்கத்தில் கௌதம் கார்த்தி - சரத்குமார் இணைந்து நடிக்கும் படம் ‘கிரிமினல்’. பார்சா பிக்சர்ஸின் மீனாக்ஷி சுந்தரம், பிக் பிரிண்ட் பிக்சர்ஸுடன் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு சாம்.சி.எஸ் இசையமைக்கிறார்.
மதுரையைப் பின்னணியாகக் கொண்டு தீவிரமான க்ரைம் த்ரில்லர் கதையாக உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. மொத்தப் படத்தையும் 40 நாட்களில் ஒரே ஷெட்யூலில் முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளது.
இது தொடர்பாக படத்தின் தயாரிப்பாளர் மீனாக்ஷி சுந்தரம் பேசும்போது, “எங்களுடைய புதிய படமான 'கிரிமினல்' வெற்றிகரமாக மதுரையில் தொடங்கப்பட்டதில் மகிழ்ச்சி. மொத்தப் படத்தையும் ஒரே ஷெட்யூலாக 40 நாட்களில் முடிக்கத் திட்டமிட்டு இருக்கிறோம். இதற்கு முன்பு நடித்திராத தனித்துவமான கதாபாத்திரங்களில் கெளதம் கார்த்திக் மற்றும் சரத்குமார் நடிக்க இருக்கிறார்கள். கெளதம் கார்த்திக் குற்றவாளியாக நடிக்க காவல் துறை அதிகாரியாக சரத்குமார் நடிக்கிறார்" என்றார்.