மம்மூட்டி - லிஜோ ஜோஸ் பெல்லிச்சேரியின் ‘நண்பகல் நேரத்து மயக்கம்’ திரைப்படம் ஜனவரி 26-ஆம் தேதி தமிழகத்தில் வெளியிடப்படவுள்ளது. படத்தை டீரிம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தமிழகத்தில் வெளியிடுகிறது.
இந்தப் படம் குறித்து பேசியுள்ள நடிகர் மம்முட்டி, “படம் குறித்து யாருமே இதுவரை நெகட்டிவாக சொல்லவில்லை. அனைவரும் ரசிக்கும் வகையில் படம் உருவாக்கப்பட்டுள்ளது. நாங்கள் இந்தக் கதையை விவாதிக்கும்போதே வித்தியாசமாக இருக்கும் எனத் தெரிந்தது. தைரியமாகத்தான் இறங்கினோம்” என்றவரிடம், ‘நம் திருப்திக்காக ஒரு படம் ரசிகர்களின் விருப்பத்திற்காக ஒரு படம் என திட்டமிட்டுள்ளீர்களா?’ என எழுப்பப்பட்ட கேள்விக்கு, “எல்லாமே நம்மளுக்காகத்தான். எல்லா படமும் ரிஸ்க் எடுத்து தான் நடிக்கிறேன். மிஸ் செய்யக்கூடாது என நினைத்து செய்யும் படங்கள் தான் இவையெல்லாம். விருதுக்கான படங்கள், வெகுஜன ரசிகர்களுக்கான படங்கள் என்பதன் இடைவெளி தற்போது குறைந்துவிட்டது.
தற்போது இரண்டு படங்களுக்கும் ஒரே பார்வையாளர்கள் தான் வருகிறார்கள். இது இந்த மாதிரியான படம் என்பது தெரிந்தே வருகிறார்கள். தோல்வியில்லாமல் வெற்றியில்லை. நாம் செய்யும் ஒரு செயலுக்கான ரிசல்ட் எதிர்பார்த்த அளவில் வராத போது ஏமாற்றமாவோம். அதை நாம் தவிர்க்க முடியாது.
நடிகர்கள் ரம்யா பாண்டியன், பூ ராம், நமோ நாராயணா, ராமச்சந்திரன் துரைராஜ் என படத்தில் தமிழ் நடிகர்கள் மிகச் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கின்றனர். கும்பகோணம் பக்கம் ஒரு கிராமத்தில் நடந்த படப்பிடிப்பின் போது கிராம மக்கள், நடிகர்கள் என அனைவரும் ஒன்றாக பேசிப், பழகி, உணவருந்தி குடும்பம் போலவே இருந்தது மகிழ்ச்சியாக இருந்தது. இந்தக் கதையைக் கேட்டவுடன் இதைத் தவற விடக்கூடாது என்று எனக்கு தோன்றிவிட்டது. கண்டிப்பாக தமிழ் ரசிகர்களுக்கும் இந்தப் படம் பிடிக்கும் என்று நம்புகிறேன்” என்றார். நண்பகல் நேரத்து மயக்கம் ட்ரெய்லர் வீடியோ:
» ‘கைதி ரீமேக்கா இது?’ - அஜய் தேவ்கனின் ‘போலா’ டீசர் குறித்து நெட்டிசன் ரியாக்ஷன்
» நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்: ஒருநாள் கூட பங்கேற்காத இளையராஜா