தெலுங்கு சினிமா பின்னணி பாடகி மங்க்லி. இவர் ‘புஷ்பா’ படத்தில் இடம்பெற்ற, ‘ஊ சொல்றியா மாமா’ பாடலின் தெலுங்குப் பதிப்பைப் பாடியிருந்தார். இவர், கர்நாடக மாநிலம் பெல்லாரியில் நடந்த ‘பெல்லாரி உற்சவம்’ இசை நிகழ்ச்சியில் சனிக்கிழமை கலந்து கொண்டார். நிகழ்ச்சி முடிந்து திரும்பும் போது, அவர் மேக்கப் அறைக்குள் ரசிகர்கள் நுழைந்ததாகவும் அவர்களை போலீஸார் தடியடி நடத்தி கலைத்ததாகவும் அவர் கார் கல்வீசித் தாக்கப்பட்டதாகவும் செய்திகள் வெளியாயின.
இதை மறுத்துள்ள மங்க்லி, “இது அனைத்தும் பொய். கர்நாடக ரசிகர்கள் என் மீது அன்பைப் பொழிந்தார்கள். நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் நன்றாகக் கவனித்துக் கொண்டார்கள். என் பெயரையும் புகழையும் கெடுக்க, என் கார் மீது கல்வீசி தாக்கினார்கள் என்பது உட்பட பல பொய் தகவல்கள் பரப்பப்படுகின்றன. தவறான செய்திகளை நம்ப வேண்டாம்” என்று அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.