4 ஆண்டுகளுக்குப் பிறகு ஷாருக்கானின் படம்: பிரம்மாண்ட கட்அவுட்டுகளுடன் ‘பதான்’ கொண்டாட்டம்

By செய்திப்பிரிவு

சென்னை: நடிகர் ஷாருக்கானின் ‘பதான்’ படத்திற்கு தமிழ்நாட்டில் பிரம்மாண்டமான கட்-அவுட்கள் வைத்து ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஷாருக்கான் நடித்துள்ள ‘பதான்’ திரைப்படம் வரும் ஜனவரி 25-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. ஆதித்யா சோப்ரா தயாரித்துள்ள இப்படத்தில் ஷாருக்கானுடன் தீபிகா படுகோன், ஜான் ஆப்ரகாம், டிம்பிள் கபாடியா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். யாஷ் ராஜ் தயாரிப்பு நிறுவனத்தின் 50-வது படமாக இந்தப் படம் உருவாகியிருக்கிறது. அண்மையில் வெளியான இப்படத்தின் ட்ரெய்லரின் தமிழ் பதிப்பை நடிகர் விஜய் வெளியிட்டிருந்தார். அதற்காக நடிகர் விஜய்க்கு, ஷாருக்கான் நன்றியும் தெரிவித்திருந்தார்.

‘பதான்’ படத்தின் முன்பதிவு நடைபெற்று பல்வேறு திரையரங்குகளில் டிக்கெட்டுகள் விற்று தீர்ந்துவிட்டன. தற்போது வரை உலகம் முழுக்க 2.5 லட்சம் டிக்கெட்டுகளுக்கு மேல் விற்பனையாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. படம் முதல் நாள் உலகம் முழுவதும் ரூ. 40 கோடி வரை வசூலிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. முதல் வாரத்தில் படம் உலகம் முழுவதும் ரூ.300 கோடி அளவில் வசூலிக்கும் என திரைப்பட வர்த்தகர்கள் கணித்துள்ளனர்.

இந்நிலையில், நான்கு ஆண்டுகளுக்கு பிறகு ஷாருக்கானின் படம் வெளியாகிறது என்பதால் அதைக் கொண்டாடும் விதமாக தமிழகத்தின் பல முக்கிய திரையரங்குகளில் ரசிகர்கள் பிரம்மாண்டமான கட்-அவுட்கள் வைத்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE