மடிப்பிச்சை மூலம் சிறைவாசிகளுக்காக புத்தகங்களை திரட்டிய பார்த்திபன்

By செய்திப்பிரிவு

சென்னை புத்தக கண்காட்சியில் ஒவ்வொரு அரங்காக சென்ற இயக்குநர் பார்த்திபன் சிறைவாசிகளுக்காக மடிப்பிச்சையாய் புத்தகங்களை சேகரித்த வீடியோ வைரலாகி வருகிறது.

தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கமான பபாசியின் சார்பில் சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்எம்சிஏ அரங்கில் புத்தக கண்காட்சி கடந்த 6-ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இந்த கண்காட்சியில் ஆயிரம் அரங்கில் லட்சக்கணக்கான புத்தகங்கள் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு நாளும் முன்னணி எழுத்தாளர்கள் அரங்கில் அமர்ந்து புத்தகங்களில் கையெழுத்திட்டு வாசகர்களை உற்சாகப்படுத்தி வருகின்றனர். இந்த புத்தகத் திருவிழா இன்றுடன் நிறைவடைகிறது.

இந்த நிலையில் நடிகரும், இயக்குநருமான பார்த்திபன், புத்தகத் திருவிழாவில் ஒவ்வொரு அரங்கிலும் சென்று துண்டை நீட்டி மடிப்பிச்சை கேட்டு புத்தகங்களைப் பெற்றார். சிறைவாசிகளுக்காக புத்தகம் வேண்டி அவர் ஒவ்வொரு அரங்காக சென்று மடிப்பிச்சை கேட்டுப் புத்தகங்களை தானமாக பெற்றார். அந்த புத்தகங்களை கூண்டு வானம் அரங்கில் சேர்த்தார். இது தொடர்பாக அவர், “மடிப்பிச்சை ஏந்தி சிறைக்கைதிகளுக்கு 1000 புத்தகங்களைத் திரட்டியது மகிழ்ச்சி” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE