‘‘தமிழினத்தை அழிக்க நினைக்கும் கூட்டங்களுக்கு என் படம் பதிலடி” - வ.கவுதமன் 

By செய்திப்பிரிவு

இயக்குநர் வ.கெளதமன் இயக்கத்தில் உருவாகும் ‘மாவீரா’ படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியது.

தமிழில் ‘கனவே கலையாதே’, ‘மகிழ்ச்சி’ உள்ளிட்ட படங்களின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் வ.கவுதமன் அடுத்ததாக ‘மாவீரா’ படத்தை இயக்குகிறார். வி.கே புரடக்க்ஷன் குழுமம் தயாரிக்கும் இந்த படத்தில் வ.கௌதமன் நாயகனாக நடிக்க உடன்
சமுத்திரக்கனி, ராதாரவி, மன்சூரலிகான், சரண்யா பொன்வண்ணன், அஸ்வினி சந்திரசேகர், இளவரசு, ஆடுகளம் நரேன், கிங்ஸ்லி, ‘பாகுபலி’ பிரபாகர் உள்ளிட்டவர்கள் நடிக்கிறார்கள். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் விருத்தாசலத்தில் இன்று தொடங்கியது.

இப்படம் குறித்து பேசிய இயக்குநர் வ.கவுதமன், “இப்படம் தமிழர்களின் தொன்மைமிக்க வீரம், அறம், ஈரத்தை சொல்வதோடு படம் பார்க்கும் ஒவ்வொருவரையும் தங்களை திரைப்படத்தோடு தொடர்பு படுத்தி கொள்ள செய்யும் வகையில் அனைத்து தரப்பினரையும் கவரும் மண்ணதிரும் ஒரு மாபெரும் வெற்றிப்படைப்பாக இருக்கும்.

சந்தனக்காட்டு மாவீரன் வீரப்பனை படைத்துவிட்டேன். இது முந்திரிக்காட்டில் வாழ்ந்த மாவீரர் ஒருவருடைய வாழ்க்கை வரலாறாகும். அடுத்து வன்னிக்காடு மட்டுமே மீதமுள்ளது. தமக்கு மேலானவர்கள் யாரும் இல்லை, கீழானவர்கள் யாரும் இல்லை என்ற சமத்துவத்தோடு எல்லா மக்களையும் சமமாக பாவித்த அதே சமயத்தில் 'அத்துமீறினால் யுத்தம்' என்கிற இலக்கோடு மண்ணையும் மானத்தையும் காத்த ஒரு மாவீரனின் வாழ்க்கை வரலாறு இது. தமிழினத்தை அழிக்க நினைக்கும் கூட்டங்களுக்கு இப்படைப்பு பதில் மட்டுமல்ல மிகச்சரியான பதிலடியும் கொடுக்கும்” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE