தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சி 6-வது சீசனின் இறுதிப் போட்டிக்கு, அசீம், விக்ரமன், அமுதவாணன், மைனா, ஷிவின் ஆகியோர் தகுதி பெற்றுள்ளனர். இதில், விசிக உறுப்பினரான விக்ரமனுக்கு அக்கட்சியின் தலைவரும், எம்.பியுமான தொல்.திருமாவளவன் ட்விட்டரில் ஆதரவு கேட்டுப் பதிவிட்டார். இது சர்ச்சையானது. இதற்கு முன்னாள் பிக்பாஸ் போட்டியாளர், வனிதா விஜயகுமார் எதிர்ப்பு தெரிவித்திருந்தார்.
ஓர் அரசியல் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் தன் ஆதரவாளர்களைத் தூண்டி, ரியாலிட்டி ஷோவுக்கு எப்படி வாக்களிக்கச் செய்ய முடியும்? என கேள்வி எழுப்பி இருந்தார். இதையடுத்து அவருக்கு அக்கட்சியினர் மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து வனிதா கூறியிருப்பதாவது:
நான் பேசிய யூடியூப் சேனலுக்கு, என்னை எச்சரிக்க ஃபோன் மூலம் மிரட்டல் விடுத்துள்ளனர். யாருக்கும் எதற்கும் பயந்தவள் நான் இல்லை. உங்கள் அரசியல் புத்தி என்ன என்று காலம் காலமாகப் பார்த்திருக்கிறோம். நேர்மையாக மக்களுக்கு நல்லது செய்துமுன்னேறப் பாருங்கள். உங்கள் அரசியலை என்னிடம் வைத்துக் கொள்ளாதீர்கள். ஒரு பிக்பாஸ் ஜெயிப்பதற்கு இவ்வளவு அராஜகம் என்றால், தேர்தல் வரும்போது என்னென்ன செய்வார்கள், இவர்களைப் போன்ற அரசியல்வாதிகள்? நீங்கள்உங்கள் அரசியல் வேலையை பாருங்கள்.எங்கள் பொழுதுபோக்குத் தொழிலில் தொந்தரவு செய்வதை நிறுத்துங்கள். இவ்வாறு தெரிவித்துள்ளார்.