தங்கர் பச்சானின் ‘கருமேகங்கள் கலைகின்றன’ படப்பிடிப்பு நிறைவு

By செய்திப்பிரிவு

தங்கர் பச்சான் இயக்கும் ‘கருமேகங்கள் கலைகின்றன’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இயக்குநர் தங்கர் பச்சான் இயக்கும் புதிய படம் ‘கருமேகங்கள் கலைகின்றன’. இப்படத்தில் பாரதிராஜா, யோகிபாபு, கவுதம் வாசுதேவ் மேனன், அதிதி பாலன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இப்படத்திற்கு ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

சிறுகதை ஒன்றை தழுவி உருவாக்கப்படும் இப்படத்தை வாவ் மீடியா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் மூலம் வீரசக்தி தயாரிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு கடந்தாண்டு ஜூலை மாதம் தொடங்கியது. இந்நிலையில் தற்போது படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக இயக்குநர் தங்கர் பச்சான் தனது ஃபேஸ்புக் பக்கத்தில், “திரைப்படங்களுக்காக அமைக்கப்படும் அரங்கில் நான் படப்பிடிப்பு நடத்த விரும்புவதில்லை. காட்சிகள் இயல்பாக அமைய வேண்டும் என்பதற்காகத்தான் இவ்வாறு படமாக்குகிறேன். மக்களுக்கிடையே எனது பாத்திரங்களை உலவ விடுவதற்காக ஒவ்வொரு காட்சியையும் படமாக்கி முடிப்பதற்குள் படாதபாடு பட வேண்டி இருக்கிறது.

மக்களிடத்தில் பேருபெற்ற பாரதிராஜா, யோகி பாபு, கௌதம் வாசுதேவ் மேனன், அதிதி பாலன் ஆகியோரைக்கொண்டு நேற்றோடு 'கருமேகங்கள் கலைகின்றன’ படப்பிடிப்பு முழுவதும் நிறைவு பெற்றது. மனதுக்கு நிறைவான படைப்பை உருவாக்கத்தான் இத்தகைய போராட்டம் என எண்ணுகையில் சோர்வும் அயர்ச்சியும் மறைகின்றன.

இனி வரும் நாட்கள் படைப்பை செறிவூட்டி உயிருள்ள படைப்பாக மாற்றுவதற்கான நாட்கள். இவ்வாண்டு இறுதிக்குள் என் இயக்கத்தில் மூன்று படைப்புகள் வெளிவரும் என நம்புகிறேன்!” என பதிவிட்டுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE