கமல்ஹாசன் அனுப்பிய வாழ்த்து மடல் - ‘காந்தாரா’ இயக்குநர் ரிஷப் ஷெட்டி நெகிழ்ச்சி

By செய்திப்பிரிவு

“இந்திய சினிமாவின் லெஜண்ட்டான நடிகர் கமல்ஹாசனிடம் இருந்து இதைப் பெறுவதில் மகிழ்ச்சி அடைகிறேன்” என கமல்ஹாசன் அனுப்பி வைத்த வாழ்த்து மடலுக்கு இயக்குநர் ரிஷப் ஷெட்டி நன்றி தெரிவித்துள்ளார்.

கன்னட இயக்குநர் ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்திருந்த படம் ‘காந்தாரா’. கடந்தாண்டு செப்டம்பர் 30-ம் தேதி கன்னடத்தில் வெளியான இப்படம் ரசிகர்களிடையே கிடைத்த வரவேற்பின் காரணமாக பான் இந்தியா முறையில் வெளியிடப்பட்டது. ரூ.16 கோடியில் உருவான இப்படம் ரூ.450 கோடி வரை வசூலித்து பிரமாண்ட சாதனையை படைத்தது. படம் வெளியானபோதே படத்தைப் பார்த்துவிட்டு நடிகர் ரஜினிகாந்த் பாராட்டுத் தெரிவித்திருந்த நிலையில், தற்போது நடிகர் கமல்ஹாசனும் படம் குறித்தான பாராட்டு கடிதத்தை ரிஷப் ஷெட்டிக்கு அனுப்பி வைத்துள்ளார்.

இந்நிலையில், கமல்ஹாசன் அனுப்பிய வாழ்த்து மடலை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள ரிஷப் ஷெட்டி, ‘‘இந்திய சினிமாவின் லெஜண்ட்டான நடிகர் கமல்ஹாசனிடம் இருந்து இதைப் பெறுவதில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த எதிர்பாராத பரிசைப் பார்த்தபோது மகிழ்ச்சியாக இருந்தது. இதை அனுப்பி வைத்ததற்கு நன்றி கமல் சார்” எனத் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE