‘‘இந்திய சினிமாவை பெருமைப்பட வைத்ததற்கு நன்றி” - கீரவாணிக்கு ரஜினிகாந்த் வாழ்த்து

By செய்திப்பிரிவு

“இந்திய சினிமாவுக்கு கோல்டன் குளோப் விருதை பெற்றுக்கொடுத்து பெருமைபடுத்திய இசையமைப்பாளர் கீரவாணி மற்றும் இயக்குநர் ராஜமவுலிக்கு நன்றிகள்” என ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

இயக்குநர் ராஜமவுலி இயக்கத்தில் கடந்த 2022 மார்ச் மாதம் வெளிவந்த திரைப்படம்தான் ‘ஆர்ஆர்ஆர்’. இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள ‘நாட்டுக் கூத்து’ பாடலுக்கு ‘Best Original Song’ பிரிவில் கோல்டன் குளோப் விருது கிடைத்துள்ளது. சர்வதேச அளவில் திரைத்துறையில் இந்த விருது மிக முக்கிய விருதாக பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், இந்த விருதை பெற்றுள்ள இசையமைப்பாளர் கீரவாணிக்கு பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகர் ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில், “இந்திய சினிமாவுக்கு கோல்டன் குளோப் விருதை பெற்றுகொடுத்து பெருமைபடுத்திய இசையமைப்பாளர் கீரவாணி மற்றும் ராஜமவுலிக்கு நன்றிகள்” என தெரிவித்துள்ளார்.

முன்னதாக, கடந்த 1962 முதலில் பெஸ்ட் ஒரிஜினல் பாடலுக்கான கோல்டன் குளோப் விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்தப் பிரிவில் முதல் விருதை வென்ற இந்திய சினிமா என்ற பெருமையை ‘ஆர்ஆர்ஆர்’ படக்குழு பெற்றுள்ளது. இதற்கு முன்னர் கடந்த 2009-ல் ஏ.ஆர்.ரஹ்மான், பெஸ்ட் ஒரிஜினல் ஸ்கோர் பிரிவில் கோல்டன் குளோப் விருதை வென்றிருந்தார்.

நாட்டுக் கூத்து பாடலுக்கு இசையமைப்பாளர் எம்.எம்.கீரவாணி இசை அமைத்திருந்தார். இந்தப் பாடலை தெலுங்கில் சந்திரபோஸ் எழுதி இருந்தார். தமிழில் மதன் கார்க்கி எழுதி இருந்தது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE