“நான் கதையைத்தான் நம்புகிறேன். எதிர்காலத்தில் அஜித்துக்கு ஏற்ற கதை கிடைத்தால் அவருடன் இணைந்து படம் பண்ணுவேன்” என ‘வாரிசு’ பட தயாரிப்பாளர் தில்ராஜு தெரிவித்துள்ளார்.
வம்சி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள திரைப்படம் ‘வாரிசு’. இப்படத்தை தில் ராஜு தயாரித்துள்ளார். தமன் இசை அமைத்திருக்கும் இப்படத்தில் ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், ஷியாம், பிரகாஷ்ராஜ், யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஏற்கெனவே படத்தில் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 11-ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ‘வாரிசு’ படத்தின் முன்பதிவும் பல்வேறு திரையரங்குகளில் தொடங்கியவுடனேயே முடிவடைந்துவிட்டது.
இந்த நிலையில் ‘வாரிசு’ படத்தின் தெலுங்கு பதிப்பான ‘வாரசுடு’ ஜனவரி 14-ம் தேதி வெளியாகும் என அதன் தயாரிப்பாளர் தில் ராஜு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பத்திரிகையாளர் சந்திப்பில் அவர் பேசுகையில், ‘‘சங்கராந்தி பண்டிகை அன்று வெளியாகும் நமது தெலுங்கு கதாநாயகர்களது படங்களான ‘வீர சிம்ஹா ரெட்டி’, ‘வால்டர் வீரய்யா’ ஆகிய படங்களை முதலில் தியேட்டரில் பாருங்கள். இதன் காரணமாகதான் நாங்கள் ‘வாரசுடு’ படத்தின் வெளியீட்டைத் தள்ளி வைத்துள்ளோம். படம் 14-ம் தேதி வெளியாகும்” என தெரிவித்தார்.
தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த தில் ராஜு, “நான் கதையைத்தான் நம்புகிறேன். நடிகர்கள் அஜித் , ரஜினிகாந்த், கமல்ஹாசன், தனுஷ், சூர்யா ஆகியோருக்கு ஏற்ற கதை கிடைத்தால், எதிர்காலத்தில் அவர்களின் படத்தை தயாரிப்பேன்” என தெரிவித்துள்ளார்.
மேலும் ப்ரமோஷன் நிகழ்வில் விஜய் கலந்துகொள்வாரா? என்ற கேள்விக்கு, “விஜய் தெலுங்கு புரொமோஷனுக்கு ஹைதராபாத்திற்கு வர உள்ளார். அவர் என்னிடம் ஏற்கெனவே வாக்கு கொடுத்துவிட்டார். புரொமோஷன் நிகழ்ச்சிக்கான பணிகள் நடந்து கொண்டிருக்கிறது" என்றார்.