சென்னையில் தொடங்கியது ‘விஜய் 67’ படப்பிடிப்பு

By செய்திப்பிரிவு

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் ‘விஜய் 67’ படத்தின் படப்பிடிப்பு திங்கள்கிழமை சென்னையில் தொடங்கியது.

இயக்குநர் வம்சி இயக்கத்தில் விஜய் நடிக்கும் ‘வாரிசு’ படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. அண்மையில் வெளியான படத்தின் பாடல்கள் ஹிட்டடித்தன. இந்தப் படத்தைத் தொடர்ந்து நடிகர் விஜய், இயக்குநர் லோகேஷ் கனகராஜுடன் இணைகிறார். கடந்த 2021-ம் ஆண்டு இருவரின் கூட்டணியில் வெளியான ‘மாஸ்டர்’ திரைப்படம் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. இதையடுத்து மீண்டும் அதே கூட்டணி இணைந்திருப்பது ரசிகர்களிடையே உற்சாகத்தை கூட்டியுள்ளது.

இந்தப் படத்தில் 14 ஆண்டுகளுக்குப் பிறகு நடிகை த்ரிஷா, விஜய்யுடன் இணைந்து நடிக்க உள்ளதாக தகவல் வெளியானது. முக்கிய வில்லன் கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், நிவின் பாலி நடிக்கலாம் என கூறப்படுகிறது. ‘விஜய் 67’ படத்தின் பூஜை கடந்தாண்டு டிசம்பர் 5-ம் தேதி சென்னையில் நடைபெற்றது. இதனையடுத்து இன்று சென்னையில் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. மொத்தம் 10 நாட்கள் சென்னையில் படபிடிப்பு நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து காஷ்மீரில் படப்பிடிப்பு நடைபெறும் என கூறப்படுகிறது.

‘விஜய் 67’ படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியுள்ளதை நடிகர் மனோபாலா உறுதி செய்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “தளபதி 67 படப்பிடிப்பு இன்று தொடங்கியுள்ளது. லோகேஷ் மற்றும் விஜயை சந்தித்தேன். அதே ஆற்றல். முதல் நாளே.. தூள்” என பதிவிட்டுள்ளார். இதனால் விஜய் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். அண்மையில் படத்தில் நடிப்பை கௌதம் வாசுதேவ் மேனன் உறுதிசெய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE