‘துணிவு’ படத்தைத் தொடர்ந்து அஜித் நடிக்க உள்ள ‘ஏகே 62’ படத்தில் கவனம் செலுத்தி வருவதாக இயக்குநர் விக்னேஷ் சிவன் தெரிவித்துள்ளார்.
ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்கும் ‘துணிவு’ திரைப்படம் பொங்கலையொட்டி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. ஜிப்ரான் இசையமைத்திருக்கும் இப்படத்தின் பாடல்கள் வெளியாகி ஹிட்டடித்தது. அதேபோல அண்மையில் வெளியான படத்தின் ட்ரெய்லர் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இந்தப் படத்தைத் தொடர்ந்து அஜித் நடிக்க உள்ள அடுத்த படத்தை இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்குகிறார்.
மே மாதத்தில் படப்பிடிப்பு தொடங்கும் என கூறப்படுகிறது. இந்நிலையில் அஜித்தின் அடுத்த படம் குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள இயக்குநர் விக்னேஷ் சிவன், “எனது அடுத்த முக்கியமான பெரிய வாய்ப்பான ‘ஏகே 62’ படத்தில் கவனம் செலுத்தி வருகிறேன். இந்தப் பெரிய பொறுப்பினையளித்த அஜித், லைகா தயாரிப்பு நிறுவனத்திற்கு நன்றி. சுவாரசியமான புத்தாண்டை எதிர்நோக்கியுள்ளேன். நீங்கள் வைத்திருக்கும் சிறிய ஒவ்வொன்றினை நினைத்தும் மகிழ்ச்சியடைவீர்கள் என நம்புகிறேன்.
வாழ்க்கையில் சிறிய விஷயங்கள்தான் நம்மை மகிழ்ச்சியாக்குகிறது. அதில் கவனம் செலுத்தி மகிழ்ந்திருங்கள். பெரிய விஷயங்கள் தானாக வந்து விழுந்துவிடும்” என பதிவிட்டுள்ளார். இதன் மூலம் அஜித்தின் அடுத்த படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க இருப்பது உறுதியாகியுள்ளது. கடந்த ஆண்டு விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்த ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ திரைப்படம் வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.