தமிழில், ‘முனியாண்டி விலங்கியல் மூன்றாம் ஆண்டு’, ‘வேலூர் மாவட்டம்’, ‘வித்தகன்’, ‘தகராறு’, ‘சவரக்கத்தி’, ‘தலைவி’ உட்பட பல படங்களில் நடித்தவர், மலையாள நடிகை பூர்ணா. இவர் ஷாம்னா காசிம் என்ற தனது நிஜப் பெயரில் மலையாளம் மற்றும் தெலுங்கில் நடித்து வருகிறார்.
இவருக்கும் துபாயில் வசிக்கும் ஆசிப் அலி என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், தனக்கும் ஆசிப் அலிக்கும், ஜூன் 12-ம் தேதி திருமணம் நடந்துவிட்டதாக பூர்ணா சில மாதங்கள் முன் அறிவித்தார். துபாயில் நெருங்கிய உறவினர்கள் மத்தியில் திருமணம் நடந்தது என்றும் தற்போது கணவருடன் துபாயில் வசித்து வருவதாகவும் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் தற்போது பூர்ணா, தான் அம்மா ஆகப்போவதாக மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளார். தனது யூடியூப் வலைத்தளம் மூலமாக இந்த தகவலை வெளிப்படுத்தினார். அந்த வீடியோவில், "நான் அம்மா ஆக தயாராகிவிட்டேன். என் அம்மா, அப்பாவும் தாத்தா பாட்டி ஆக போகிறார்கள். மிக மகிழ்ச்சியாக உள்ளேன். உங்கள் வாழ்த்தும், அன்பும் எனக்கு வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.