சினிமா துளிகள் - மீரா நந்தனுக்கு எதிராக சைபர் தாக்குதல்

By செய்திப்பிரிவு

நடிகர் ‘மாயி’ சுந்தர் மரணம்: ‘துள்ளாத மனமும் துள்ளும்', ‘மாயி’, ‘குள்ளநரி கூட்டம்’, ‘ஸ்கெட்ச்’, ‘கட்டாகுஸ்தி’ உட்பட 50-க்கும் மேற்பட்ட படங்களில் காமெடி மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்திருப்பவர் ‘மாயி’ சுந்தர். கடந்த சில நாட்களாக, மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்ட அவர் அதற்காக, தனது சொந்த ஊரான மன்னார்குடியில் சிகிச்சை பெற்று வந்தார்.சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை உயிரிழந்தார். அவர் மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

2 வேடங்களில் ஹன்சிகா!: ஆர்.கண்ணன் இயக்கத்தில் ஹன்சிகா முதன்முறையாக 2 வேடங்களில் நடிக்கும் படத்துக்கு ‘காந்தாரி’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. மெட்ரோ சிரிஷ், மயில்சாமி, தலைவாசல் விஜய், ‘ஆடுகளம்' நரேன் உட்பட பலர் நடிக்கின்றனர். மா.தொல்காப்பியன் எழுதிய கதைக்கு ஜி.தனஞ்செயன் திரைக்கதை அமைத்துள்ளார். னி செல்வராஜ் வசனம் எழுதியுள்ளார். பாலசுப்ரமணியெம் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு எல்.வி.முத்துகணேஷ் இசை அமைத்துள்ளார். எமோஷனல், ஹாரரை அடிப்படையாகக் கொண்ட காமெடி த்ரில்லராக இந்தப் படம் இருக்கும் என்று படக்குழு தெரிவித்துள்ளது.

மீரா நந்தனுக்கு எதிராக சைபர் தாக்குதல்: தமிழில், ‘வால்மீகி’, ‘அய்யனார்’, ‘சண்டமாருதம்’, ‘சூரியநகரம்’ உட்பட சில படங்களில் நடித்திருப்பவர், மலையாள நடிகை மீரா நந்தன். இப்போது நடிப்பை விட்டுவிட்டு, துபாயில் மலையாள எஃப் எம் ஒன்றில் ரேடியோ ஜாக்கியாகப் பணியாற்றுகிறார். இவர், வணிக வளாகம் ஒன்றின் இரவு ஷாப்பிங் திருவிழா குறித்து விளம்பர வீடியோவில் நடித்திருந்தார். இதில் அவர் முறையான ஆடை அணியவில்லை என்று கூறி சிலர் அவருக்கு எதிராக மோசமான கருத்துகளைத் தெரிவித்தனர். இது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சைபர் தாக்குதலுக்கு எதிராகவும் மீரா நந்தனுக்கு ஆதரவாகவும் மலையாள நடிகர், நடிகைகள் பலர் கருத்து தெரிவித்துள்ளனர். ‘எப்படி உடை அணிய வேண்டும் என்பதை மற்றவர்கள் சொல்லித்தர வேண்டாம்’என்று அவர்கள் கூறியுள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE