யூடியூப் விமர்சனங்கள்: அதிருப்தியை பதிவு செய்த விஜய் சேதுபதி

By செய்திப்பிரிவு

“திரைப்படங்களை புரிந்துகொள்ள முயற்சியுங்கள். வாழ்க்கையை புரிந்துகொள்ள திரைப்படங்கள் உதவுகின்றன” என்று நடிகர் விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார். மேலும், யூடியூபில் வெளியாகும் திரை விமர்சனங்கள் குறித்த தனது அதிருப்தியையும் அவர் பதிவு செய்தார்.

20-வது சர்வதேச திரைப்பட விழா கடந்த டிசம்பர் 15-ம் தேதி தொடங்கியது. 51 நாடுகளில் இருந்து 102 படங்கள் திரையிடப்பட்ட இந்த விழாவானது வியாழக்கிழமை நிறைவு பெற்றது. இந்த விழாவில் சிறந்த தமிழ்ப் படமாக ‘கிடா’ தேர்வு செய்யப்பட்டு ரூ.1 லட்சம் ரூபாய் பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டது. இதில் சிறந்த நடிகராக விஜய் சேதுபதி ‘மாமனிதன்’ படத்துக்காக தேர்வு செய்யப்பட்டார். விருதைப் பெற்ற அவர், விருதுக்கான பரிசுத் தொகையை விழாக் கமிட்டிக்கு நன்கொடையாக திருப்பி வழங்கினார்.

இதையடுத்து மேடையில் பேசிய அவர், “திரைப்படங்களை பார்த்துவிட்டு கடந்துபோய் விடாமல் இயக்குநர்கள் கதையின் வாயிலாக தெரிவிக்க விரும்பும் விஷயங்களை புரிந்துகொள்ளுங்கள். ஆரோக்கியமாக விவாதங்களில் ஈடுபடுங்கள். வாழ்க்கையின் அனுபவங்கள்தான் திரைப்படங்களாகின்றன. முடிந்த அளவு ஒரு திரைப்படத்தை புரிந்துகொள்ள முயற்சியுங்கள். வாழ்க்கையைப் புரிந்துகொள்ள திரைப்படங்கள் உதவுகின்றன.

எந்தவொரு திரைப்படத்தையும் விமர்சனங்களின் வாயிலாக புரிந்துகொள்ள முயற்சிக்காதீர்கள். அது நல்லதல்ல. இப்போதெல்லாம் யூடியூப்பில் கெட்டது பேசினால்தான் பணம் வருகிறது. விமர்சகர்கள் பார்வையில் திரைப்படங்கள் சரியாக பார்க்கப்படுகின்றதா எனத் தெரியவில்லை. நடிகர் ‘பூ’ ராமு அவர்களுடன் இணைந்து இந்த விருதை பகிர்ந்து கொள்வதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி” எனத் தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE