தயாரிப்பாளர்கள் தந்த ‘டார்ச்சர்’ அனுபவங்கள்: ரிஷப் ஷெட்டி பகிர்வு

By செய்திப்பிரிவு

“படத் தயாரிப்பாளர்கள் நகைச்சுவைக் காட்சிகளை சேர்க்கச் சொல்லி டார்ச்சர் செய்ததால் தனியாக தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கினோம்” என்று நடிகர் ரிஷப் ஷெட்டி தெரிவித்துள்ளார்.

‘காந்தாரா’ படத்தின் இயக்குநரும் நடிகருமான ரிஷப் ஷெட்டி அண்மையில் பிங்க் வில்லா செய்தித் தளத்துக்கு அளித்த நேர்காணலில், “நாங்கள் கதை சொல்ல செல்லும்போது அதைக் கேட்கும் தயாரிப்பாளர்கள் படத்தில் நிச்சயம் நகைச்சுவைக் காட்சிகளைச் சேர்க்க வேண்டும் என வலியுறுத்தினார்கள். அதனால்தான் நானும் ரக்‌ஷித் ஷெட்டியும் சொந்தமாக தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கினோம். அதன்மூலம் ‘கிரிக் பார்டி’ என்ற படத்தை தயாரித்தோம். அதனை நான் இயக்கியிருந்தேன்.

அதன்பிறகு குழந்தைகளுக்கான படங்களை பண்ணினேன். நாங்கள் பகிர விரும்பும் கதைகளில் திரைப்படங்களை உருவாக்க விரும்பினோம். எங்கள் தயாரிப்பு நிறுவனத்தின் கீழ் பல சோதனைப் படங்களைத் தயாரித்தோம். சமீபத்தில் பூசன் திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட ‘சிவம்மா’ படத்தை தயாரித்தேன். நாங்கள் ரசிகர்களுக்கான படங்களை உருவாக்க நினைக்கிறோம்” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE