‘லைகர்’ பட இயக்குநர் பூரி ஜெகந்நாத் பாலிவுட் நடிகர் சல்மான்கானை வைத்து புதிய படமொன்றை இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
விஜய் தேவரகொண்டா நடிப்பில் பூரி ஜெகந்நாத் இயக்கத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியான படம் ‘லைகர்’. அனன்யா பாண்டே, ரம்யா கிருஷ்ணன், ரோனித் ராய் ஆகியோர் நடித்திருந்த இப்படத்திற்கு சுனில் காஷ்யப் இசையமைத்திருந்தார். ரூ.120 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம் முதல் நாளிலிருந்தே எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்ததால் வசூல் ரீதியாக கடும் சரிவை சந்தித்தது. பான் இந்தியா முறையில் வெளியான இப்படம் மொத்தமாக வெறும் ரூ.60 கோடி வசூலை ஈட்டி நஷ்டமடைந்தது.
இந்த தோல்வியிலிருந்து மீண்டு வரும் இயக்குநர் பூரி ஜெகந்நாத், புதிய படத்திற்கான ஸ்கிரிப்டை எழுதியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தக்கதையை பாலிவுட் நடிகர் சல்மான்கானிடம் பூரி ஜெகந்நாத் தெரிவித்துள்ளதாகவும், அவரும் படத்தில் நடிக்க ஆர்வம் காட்டியுள்ளதாகவும் தகவல் பரவி வருகிறது. ஆனால் இது குறித்து எந்த அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.