காசே தான் கடவுளடா | அஜித்தின் 'துணிவு' பட இரண்டாவது சிங்கிள் பாடல் எப்படி?  

By செய்திப்பிரிவு

அஜித் நடிக்கும் ‘துணிவு’ படத்தின் இரண்டாவது சிங்கிள் பாடலான ‘காசேதான் கடவுளடா’ வெளியாகியுள்ளது. அஜித் ரசிகர்கள் இதனை ஷேர் செய்து கொண்டாடி வருகின்றனர்.

‘நேர்கொண்ட பார்வை’, ‘வலிமை’ படங்களுக்குப் பிறகு நடிகர் அஜித் - ஹெச்.வினோத் - போனி கபூர் கூட்டணி தற்போது ‘துணிவு’ படத்திற்காக மூன்றாவது முறையாக ஒன்று சேர்ந்துள்ளது. மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி, ஜி.எம்.சுந்தர், மகாநதி சங்கர், ஜான் கொக்கன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்தின் தமிழ்நாடு வெளியீட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் பெற்றுள்ளது.

சென்னை, ஹைதராபாத் ஆகிய இடங்களில் இதன் படப்பிடிப்பு நடந்தது. ஜிப்ரான் இசையமைத்துள்ள இப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு வெளியாகிறது. படத்தில் இடம்பெற்றுள்ள ‘சில்லா சில்லா’ பாடல் கடந்த மாதம் 9-ம் தேதி வெளியானது. இந்நிலையில் தற்போது படத்தின் இரண்டாவது பாடலான ‘காசே தான் கடவுளடா’ பாடல் வெளியாகியுள்ளது.

பாடல் எப்படி?: ‘காசே தான் கடவுளடா அந்த கடவுளுக்கும் அது தெரியுமடா’ என்ற பழைய பாடலின் முதல் வார்த்தையை முதலீடாக்கி முற்றிலும் மாறுப்பட்ட, தற்காலத்துக்கு ஏற்ற வரிகளை பொருத்தியிருக்கிறார் 2கே கிட்ஸ்களில் ஆதர்ச பாடலாசிரியர் வைசாக். அவரே பாடியும் எழுதியும் இருக்கிறார். பாடலில், ‘ஸ்விஸூல இருக்கு காந்திக்கும் கணக்கு; ஏகப்பட்ட ஈஎம்ஐ-ல நாடே கெடக்கு’ வரிகள் ஈர்க்கும் வகையில் இருக்கிறது. ‘மனுஷன மிருகமா மாத்திடும் மணி’ ‘உஷாரா இல்லன்னா தலையில துணி’, ‘பொறக்குற நொடியில வெரட்டுது காசு’ போன்ற வரிகள் காசின் தேவையை உணர்த்தும் வகையில் உள்ளது. மொத்த பாடலும் கலர்புல்லாக வெளியாகியிருக்கிறது. இந்தப்பாடலில் மஞ்சுவாரியர் இணைந்து பாடியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், அவர் குரல் கோரஸில் மறைந்திருப்பதை உணர முடிகிறது. அஜித் ரசிகர்களின் காத்திருப்பை திருப்தி படுத்தும் பாடலாக வெளியாகியிருக்கிறது இந்த ‘காசே தான் கடவுளடா’.

பாடல் வீடியோ:

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE